/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
40 சதவீத பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை முழுமை
/
40 சதவீத பஸ்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை முழுமை
ADDED : ஜூன் 25, 2025 11:39 PM
திருப்பூர்; திருப்பூர் மண்டலத்தில், 253 டவுன், 294 வெளியூர் என, 547 அரசு பஸ்களில், யு.பி.ஐ., பரிவர்த்தனை வாயிலாக, டிக்கெட் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை கோட்டத்தின் கீழ் திருப்பூர் மண்டலத்தில், பழநி, திருப்பூரில் தலா இரண்டு, தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட எட்டு கிளைகளில் இருந்து இயங்கும், 294 வெளியூர் பஸ்களில், 'கியூஆர்' கோடு வாயிலாக, போன் பே, ஜி பே, பேடிஎம்., பயன்படுத்தி 'ஆன்லைனில்' டிக்கெட் பெறும் வசதி மார்ச், 20ல் அமலுக்கு வந்தது. தொலை துார பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஏப்., 15 முதல், 253 டவுன் பஸ்களிலும் யு.பி.ஐ., வாயிலாக டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும், 40 சதவீத பஸ்களில் மட்டும் முழுமையாக 'கியூஆர்' கோடு நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. புற நகர்களுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்களில் கியூஆர் கோடு வசதியை பலர் பயன்படுத்த முன்வருவதில்லை என்ற நிலை உள்ளது.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ்களில் யு.பி.ஐ., வாயிலாக டிக்கெட் பெறும் வசதி குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அரைமணி நேரத்தில் பயணிகளின் வங்கி கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்,' என்றனர்.
பஸ் நடத்துனர்கள் சிலர் கூறுகையில், 'ஒன்று கியூஆர் கோடு வாயிலாக டிக்கெட் வழங்க வேண்டும் அல்லது நேரடியாக டிக்கெட் வழங்க வேண்டும். ஒரு பிரின்ட் எடுத்து ஆன்லைன் பரிவர்த்தனை கணக்குகளை சரிபார்த்து விடுகிறோம்.
ஆனால், இவற்றுடன் வழக்கமான டிக்கெட் வாங்கும் கணக்குகளையும் கணக்கிட வேண்டியுள்ளது. எனவே, இரண்டில் ஒன்று வேண்டும். ஆன்லைன் விதிகள் எளிமையாக இருப்பதால், சில்லறை தட்டுப்பாடு வருவதில்லை; கணக்கீடும் முறையும் எளிமையாக உள்ளது,' என்றனர்.