/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோய் எதிர்ப்பாற்றல் மேம்படுத்த ஆர்வம்
/
நோய் எதிர்ப்பாற்றல் மேம்படுத்த ஆர்வம்
ADDED : ஜூன் 07, 2025 11:19 PM
திருப்பூர்: கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக, முக கவசம் மற்றும் சானிடைசர் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
நாடு முழுதும் மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. இது, 'வீரியமில்லாத கொரோனா; மக்கள் அச்சப்பட தேவையில்லை.
பொது இடங்களில் முக கவசம் அணிந்தால் போதும்' என, அரசு கூறி வருகிறது. அதற்கேற்ப, திருப்பூரில், கொரோனா தொற்றுப் பாதிப்பு இல்லை என, மருத்துவத்துறையினர் ஆறுதல் அளிக்கின்றனர்.
இருப்பினும், தொற்று பாதிப்பில் இருந்து, தங்களை தற்காத்துக் கொள்ள, மக்கள் தயாராகி வருகின்றனர். கொரோனா தொற்றுப்பரவல் சமயத்தில், முக கவசம் மற்றும் சானிடைசர் பயன்பாடு அதிகளவில் இருந்தது. தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் அவற்றை வாங்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. மருந்துக்கடை, மால் உள்ளிட்ட இடங்களில், முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்குகின்றனர்.
அதே போன்று, நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பாற்றல் தரக்கூடிய பானங்களை குடிப்பதிலும், உடலுக்கு நோய் எதிர்பாற்றல் தரக்கூடிய சிறு தானிய உணவுகளை உட்கொள்ளும் பழக்கமும், முந்தைய கொரோனா தொற்றுப்பரவலின் போது அதிகரித்தது.
இதனால், பல இடங்களில் இயற்கையாக விளையக்கூடிய சிறு தானிய பொருள் விற்பனையகங்கள், அவற்றின் மூலம் பல வகை உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு தானிய உணவுகளை உட்கொண்டு பழகிய மக்கள், தொடர்ந்து அவற்றை பயன்படுத்தி வருகின்றனர்; தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், சிறு தானிய உணவுகளை பயன்படுத்தும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது என, சிறுதானிய உணவகம் நடத்துவோர் கூறுகின்றனர். அதே போன்று உடற்பயற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி செய்வதிலும் மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.