/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரிசிக்கடை வீதியில் மின் விபத்து அபாயம்
/
அரிசிக்கடை வீதியில் மின் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 08, 2025 03:55 AM

திருப்பூர்: தெரு விளக்கு கம்பம் முறிந்த நிலையில், ஒயர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், மின் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் அரிசிக்கடை வீதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டது. ரோட்டோர நடைபாதை, பார்க்கிங் வசதி மற்றும் கான்கிரீட் ரோடு ஆகிய வசதி செய்யப்பட்டது. மேலும், அலங்கார தெருவிளக்கு கம்பமும், விளக்குகளும் பொருத்தப்பட்டன.
அரிசிக்கடைகளுக்கு கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில், அரிசிக்கடை வீதியில் உள்ள மின்கம்பம் விபத்தில் முறிந்தது. கம்பம், தற்காலிகமாக அகற்றப்பட்டாலும், முறிந்த இடத்தில், ஒயர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.
தேர்த்திருவிழாவில், தெற்கு வீதியாக உள்ள அரிசிக்கடை வீதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுக்க வருவார்கள். இந்நிலையில், பாதுகாப்பற்ற முறையில் மின்கம்பிகள் மற்றும் ஒயர் காட்சியளிப்பது, ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், தேர் வீதிகளில் கள ஆய்வு நடத்தி, இதுபோன்ற ஆபத்தான நிலையில் உள்ள ஒயர்களை சீரமைக்க வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.