ADDED : ஜூன் 10, 2024 06:16 AM

சிவகாசி, : திருத்தங்கல் சத்யா நகர் முனீஸ்வரன் காலனியில் வாறுகால், ரோடு சேதம் அடைந்து இருப்பதால் குடியிருப்புவாசிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
திருத்தங்கல் சத்யா நகர் முனீஸ்வரன் காலனியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது.
ஆனால் இதுவரையில் சீரமைக்கப்படவில்லை. தற்போது தெரு முழுவதுமே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் குடியிருப்புவாசிகள் நடமாடுவதற்கே சிரமப்படுகின்றனர்.
மேலும் இதில் டூவீலர் உட்பட எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை.
தட்டு தடுமாறி வருகின்ற டூவீலரும் விபத்தில் சிக்குகிறது. வாறுகாலும் சேதம் அடைந்திருப்பதால் கழிவுநீர் வெளியேற வழி இல்லை. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது.
எனவே முனீஸ்வரன் காலனியில் சேதம் அடைந்த வாறுகால், ரோட்டினை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.