/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது
/
சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது
சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது
சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது
ADDED : பிப் 29, 2024 11:59 PM
மதுரை- - செங்கோட்டை அகல ரயில் பாதையில் சிவகாசி வழியாக தினசரி சேவையில் பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை - குருவாயூர், செங்கோட்டை மயிலாடுதுறை, சென்னை - கொல்லம், மதுரை - செங்கோட்டை ஆகிய ரயில்களும், சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் 3 நாட்களும், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் வாரம் இரு நாட்களும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் வாரம் ஒரு முறையும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் பாதையில் சிவகாசி விருதுநகர் சாலையில் திருத்தங்கல் ரயில்வே கிராசிங்(424), சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்(427) ஆகியவற்றில் மேம்பாலம் இல்லாததால் ரயில்வே கேட் மூடப்படும் போது ரோட்டின் இரு புறங்களிலும் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் இப்பகுதிகளில் ஒவ்வொரு முறையும் ரயில் சென்ற பின் போக்குவரத்து சீராக 30 நிமிடங்களுக்கு மேல் ஆவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சிவகாசி மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் பங்களிப்பு மற்றும் முதலீட்டு அடிப்படையில் மேம்பாலம் அமைக்க 2021 ல் ரயில்வே துறை ஒப்புதல் வழங்கப்பட்டது. சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிக்கு முதற்கட்டமாக ரூ.5.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் நில உரிமையாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
2023 ஜூலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து மேம்பாலம் அமைப்பதற்கு தேவையான 2,818 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 23 நில உரிமையாளர்களுக்கு ரூ.28 கோடி வழங்கப்பட்டது.
சிவகாசி பெரியகுளம் கண்மாய் அருகே உள்ள இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் சுரங்கப் பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.64 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
2023 நவ. ல் தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு சார்பில் சாட்சியாபுரம் ரயில்வே கிராஸிங்கில் சுரங்கப்பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள கட்டடங்களை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன்பின் மேம்பாலத்திற்கான துாண்கள் அமைக்கும் இடங்களில் மண் மாதிரி சேகரிக்கும் பணி நடந்தது. மேலும் ரயில்வே லைன் அருகே பாலத்தின் உயரம், துாண்களுக்கு இடையே உள்ள துாரம், தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் மேம்பால பணி தொடங்கிய பின் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுப்பாதை வசதி ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் பிப். 26 ல் அடிக்கல் நாடினார். அடிக்கல் நாட்டிய இரு நாட்களில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் நில அளவீடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். அடிக்கல் நாட்டிய இரு நாட்களிலேயே பாலம் அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கியதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேம்பாலம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள கட்டுமானங்களை அகற்றும் படி இரு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது இறுதி நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. தற்போது பாலம் அமைய உள்ள இடத்தை அளவீடு செய்யும் பணி நடக்கிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும், என்றனர்.

