/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுரங்கப்பாதையில் நீர் தேக்கம் வாகன ஓட்டிகள் அவதி
/
சுரங்கப்பாதையில் நீர் தேக்கம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 06, 2025 04:22 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் இருந்து வரலொட்டி செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் தற்போது மழை நீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளது. இதனால் டூவீலர், ஆட்டோவில் சுரங்கப்பாதையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பாலவநத்தத்தில் இருந்து வரலொட்டி, மல்லாங்கிணர் ரோட்டிற்கு ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதை அகலரயில் பாதை திட்டத்தில் அமைக்கப்பட்டது. இவ்வழியாக மில் பணியாளர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், மருத்துவ தேவைக்கு செல்பவர்கள் உள்பட நுாற்றுக்கணக்கானோர் தினசரி சென்று வருகின்றனர்.
இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த காணப்படுகிறது. ஆனால் மழைக்காலம் துவங்கி விட்டால் மழை நீர் தேங்காமல் வெளியேறுவதற்கு முறையான வசதிகளுடன் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை.
ஒவ்வொரு மழையின் போதும் சுரங்கப்பாதையில் மழை நீர் அதிக அளவில் தேங்கி வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் நீருக்குள் மாட்டி நடுவழியில் நிற்கும் நிலையே தொடர்கிறது. மேலும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதை தடுக்க தகர செட் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டு தண்ணீர் தேங்காத வகையில் தடுப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இங்குள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது பெய்த மழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
எனவே பாலவநத்தத்தில் இருந்து வரலொட்டி செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

