இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு
UPDATED : ஜூலை 29, 2024 07:29 AM
ADDED : ஜூலை 29, 2024 06:42 AM

சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 433 பொறியியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளுக்கு, 1.79 லட்சம் இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக, இணைய வழியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு கலந்தாய்வுக்கு, 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களில், 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூலை 10ல் வெளியானது. மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22ல் துவங்கியது.
முதற்கட்டமாக, முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, ஜூலை 22 முதல் 27- வரை நடந்தது.
சிறப்புப் பிரிவில் மொத்தம் 9,639 இடங்கள் இருந்த நிலையில், 836 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதில், 92 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று முதல் துவங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆக., 10- வரை நடக்கிறது. இதில், 26,654 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பான கூடுதல் விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மூன்று சுற்றுகளாக நடக்கும் இந்த கலந்தாய்வு, செப்., 3ல் நிறைவு பெறுகிறது.
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் இன்று துவங்குகிறது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 10 வரை ஒரே சுற்றாக நடக்கிறது.