அமைச்சர்கள் மீதான வழக்குகள் லஞ்ச ஒழிப்பு துறை வாதம் துவக்கம்
அமைச்சர்கள் மீதான வழக்குகள் லஞ்ச ஒழிப்பு துறை வாதம் துவக்கம்
ADDED : ஜூன் 08, 2024 02:03 AM
சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகளை ஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் வாதம் துவங்கியது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். அது தொடர்பான வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், ஏற்கனவே வாதங்கள் நிறைவடைந்ததால், லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதங்களை முன்வைத்தார்.
அவர் வாதாடியதாவது: குற்ற வழக்குகள் தொடர்பாக புதிய தகவல்கள், ஆதாரங்கள் தெரியவந்தால், நீதிமன்ற அனுமதியுடன் போலீசார் மேல் விசாரணை நடத்தலாம்; அதற்கு தடை இல்லை. குறைபாடான விசாரணை நடத்தப்பட்டது தெரியவந்தாலும், மேல் விசாரணை நடத்த போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், வழக்கில் இருந்து குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவும், மேல் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
மேல் விசாரணை அடிப்படையில் தாக்கல் செய்யப்படும் கூடுதல் இறுதி அறிக்கையில், குற்றச்சாட்டுக்கள் தவறு என தெரியவந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்கள் விடுவிக்கலாம். இவ்வாறு அவர் வாதிட்டார்.
அட்வகேட் ஜெனரல் வாதம் நிறைவு பெறாததால், வரும் 11க்கு விசாரணையை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்தார்.