ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 16 வது குற்றவாளி ஹரிதரன் கைது:அஞ்சலை வீட்டில் செல்போன்கள் பறிமுதல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 16 வது குற்றவாளி ஹரிதரன் கைது:அஞ்சலை வீட்டில் செல்போன்கள் பறிமுதல்
UPDATED : ஜூலை 20, 2024 07:37 PM
ADDED : ஜூலை 20, 2024 07:05 PM

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஹரிதரன் கைதான நிலையில் கைதானோர் எண்ணிக்கை 16 ஆக ஆனது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., பா.ஜ., என பல்வேறு கட்சியை சேர்ந்த வக்கீல்கள் மற்றும் பிரமுகர்கள் என 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இவ்வழக்கு விசாரணையின்போது தப்பிச் செல்ல முயன்றதாக திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக ஹரிதரன் என்பவர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஹரிதரன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான வக்கீல் அருள் என்பவரின் செல்போன் ஹரிதரனிடம் இருந்ததால் அதன்பேரில் போலீசார் ஹரிதரனை கைது செய்தனர். ஹரிதரன் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ளார்.
கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்பு
இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய பா.ஜ.,முன்னாள் நிர்வாகியான அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து புளியந்தோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட தனிப்படை போலீசார் அங்கிருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். பென்டிரைவ் பேங்க் பாஸ்புக், லேப்டாப் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே கைதான ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்கு பயன்படுத்திய செல்போன்கள் வெங்கத்துார் கூவம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டன. இன்று கைதான ஹரிதரனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நாளை ஆஜர் படுத்த உள்ளனர்.