-மாசிமக திருவிழா டாஸ்மாக் விடுமுறை கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
-மாசிமக திருவிழா டாஸ்மாக் விடுமுறை கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
ADDED : பிப் 24, 2024 02:11 AM
மதுரை:தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் மாசிமகதிருவிழாவிற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்த கலெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டுக்களை பதிவு செய்தது.
கும்பகோணம் கண்ணன் தாக்கல் செய்த மனு: கும்பகோணத்தில் சிவன், விஷ்ணு கோயில்கள் உள்ளன. இங்கு இன்று (பிப்., 24) மாசிமகம் திருவிழா நடக்கிறது. பக்தர்கள் அதிகம் கூடுவர். முன்னோர்களுக்கு மகாமக குளத்தில் தர்ப்பணம் செய்து புனித நீராடுவர். கோயில்கள் சார்பில் தீர்த்தவாரி நடைபெறும். ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசு 2023 மே 10 ல் அரசாணை பிறப்பித்தது.
பக்தர்கள் நலன் கருதி கும்பகோணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பிப்.24ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி தஞ்சாவூர் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தேன்.
பிப்.,20ல் நீதிபதிகள்அமர்வு, 'கலெக்டர் பிப்.,22 க்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றவில்லை. கலெக்டர் தீபக் ஜேக்கப் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அவசர வழக்காக நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: கும்பகோணத்தில் 5 டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்களை பிப்.,23 முதல் பிப்.,24 மாலை 5:00 மணி வரை தற்காலிகமாக மூட கலெக்டர் பிப்.,22 ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு தெரிவித்து ஆவணத்தை தாக்கல் செய்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள்: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு இந்நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவிக்கிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.