சட்டவிரோத நியமனங்களை வரன்முறை செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
சட்டவிரோத நியமனங்களை வரன்முறை செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
ADDED : ஜூன் 30, 2024 06:20 AM

சென்னை: 'அனுமதிக்கப்பட்ட பணிகளில் தான் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்; முறையற்ற, சட்டவிரோத நியமனங்களை, அதிகாரிகளும், நீதிமன்றங்களும் வரன்முறை செய்ய முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் உள்ள தேவிகோடு கிராம பஞ்சாயத்தில், குடிநீர் வினியோக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், சேவியர் என்பவர் உள்ளிட்டோரை தினக்கூலி அடிப்படையில் நியமித்து, 1997ல் பஞ்சாயத்து தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.
பல ஆண்டுகளாக பணியாற்றுவதால், பணி வரன்முறை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். பணி வரன்முறை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழக அரசு, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில், விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, ''பஞ்சாயத்து பணி விதிகளின்படி, இந்த நியமனங்கள் நடக்கவில்லை. அனுமதிக்கப்படாத பணிகளில், தினக்கூலி ஊழியர்களை பணிவரன் முறை செய்ய முடியாது,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு விதிகளை பின்பற்றியே, பணியிடங்களில் நியமிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் தான், நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்; முறையற்ற, சட்டவிரோத நியமனங்களை, அதிகாரிகளும், நீதிமன்றங்களும் வரன்முறை செய்ய முடியாது.
பொது வேலைவாய்ப்பில், சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத, முறையற்ற நியமனங்களை வரன்முறை செய்வதன் வாயிலாக, தகுதியானவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது. சட்டவிரோத நியமனங்களை முறைப்படுத்துவதால், தகுதியான நபர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. பின் வாசல் நியமனங்கள், வேலையில்லாத லட்சக்கணக்கான இளைஞர்களை பாதிக்கிறது.
இரக்கத்தின் அடிப்படையில் பணி வரன்முறையை, நீதிமன்றங்கள் மேற்கொள்ள முடியாது. தேர்வு விதிமுறைகளை பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் நியமனங்கள் மேற்கொண்டால், பணிவரன்முறைக்கு நீதிமன்றங்கள் உத்தரவிடலாம்.
இந்த வழக்கை பொறுத்தவரை, தினக்கூலி அடிப்படையில், தண்ணீர் வினியோக உதவியாளரை, பஞ்சாயத்து தலைவர் நியமித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில், இந்தப் பஞ்சாயத்தில், இந்தப் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.