சீகூர் யானை வழித்தடத்தில் விடுதிகளை இடிக்க நடவடிக்கை
சீகூர் யானை வழித்தடத்தில் விடுதிகளை இடிக்க நடவடிக்கை
ADDED : செப் 16, 2025 06:11 AM

ஊட்டி: மசினகுடி, சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள, 39 விடுதி கட்டடங்களை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், சீகூர் பள்ளத்தாக்கில், மாயார், சோலுார் உள்ளிட்ட பகுதிகள் யானை வழித்தடமாக உள்ளன. இப்பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட, சுற்றுலா விடுதிகள் உட்பட பிற கட்டடங்களை அகற்ற, 2008ல் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட் உத்தரவின் கீழ், சீகூர் பள்ளத்தாக்கில், யானைகள் வழித்தடம் தொடர்பாக, 2010ல் வரைப்படத்துடன் கூடிய அரசாணை வெளியிடப்பட்டது. அப்பகுதி காட்டேஜ் உரிமையாளர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். 2018 ஆக., சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி, 39 கட்டடங்கள்; 309 அறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் 'சீல்' வைத்தது.
அதன்பின், உள்ளூர் மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, 2020 அக்., 14ல் வழங்கப்பட்ட கோர்ட் உத்தரவில், 'யானைகள் வழித்தடம் தொடர்பான பிரச்னைகளை ஆராய, சென்னை ஐகோர்ட் ஓய்வு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு, அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில், சீகூர் யானை வழித்தடத்தில் சீல் வைக்கப்பட்ட விடுதிகளை, இடித்து அகற்ற தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''யானைகள் வழித்தடத்தில் உள்ள, 39 தங்கும் விடுதிகளை விரைவில், இடிக்க படும். யானைகள் வழித்தடம் குறித்து, டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.