ADDED : ஜன 27, 2024 02:34 AM
சென்னை:'அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மண்டல வாரியாக சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பு மக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கையை தயார் செய்யும்' என அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும் வகையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுதும் பிப். 5 முதல் 10 வரை ஒன்பது மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல தரப்பு மக்களை சந்தித்து தரவுகளை சேகரித்து மிகச் சிறந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்ய உள்ளது.
மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட செயலர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். விவசாயிகள் நெசவாளர்கள் மீனவர்கள் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ள எதிர்பார்ப்புகள் தேவைகள் போன்ற தரவுகளை பெற்று வந்து அதை சம்பந்தப்பட்ட குழுவிடம் மாவட்ட செயலர்கள் ஒப்படைக்க வேண்டும்.
பலதரப்பட்ட மக்களை சந்திக்கும்போது அவர்கள் சொல்லும் விபரங்களை சேகரித்து வைக்கும் மா.செ.க்கள் விபரங்கள் அளிப்போரை நேரில் அழைத்து வந்து குழுவிடம் ஒப்படைத்து நேரடியாகவே குழுவிடம் தகவலை பகிரச் சொல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

