அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்
UPDATED : ஜன 11, 2024 12:21 PM
ADDED : ஜன 11, 2024 11:11 AM

சென்னை: அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அதிமுக, கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்.,க்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான இ.பி.எஸ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சதிஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தடையை நீக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஜன.,11) தீர்ப்பளித்தது. அதன்படி, ஓ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதி விதித்த தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.

