'ஜாதி கைப்பட்டை வெட்கக்கேடான செயல்' * கவர்னர் ரவி வேதனை
'ஜாதி கைப்பட்டை வெட்கக்கேடான செயல்' * கவர்னர் ரவி வேதனை
UPDATED : ஜன 26, 2024 09:40 PM
ADDED : ஜன 26, 2024 09:32 PM
சென்னை:குடியரசு தின செய்தியில், கவர்னர் ரவிகூறியுள்ளதாவது:
நம் பாரதம், கடந்த ஆண்டு பல அற்புதமான சாதனைகளை படைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில், நம் நாட்டை முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் உறுதியுடன், புத்தாண்டு துவங்கி உள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில், ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை நடந்துள்ளது. இது வரலாற்றுப்பூர்வ நிகழ்வு. முழு தேசத்தையும் உற்சாகப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் மேலும் முழுமையான வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க உதவும், புதிய ஆற்றலை புகுத்தி உள்ளது.
ராமருக்கு தமிழகத்துடன் ஆழமான தொடர்பு உள்ளது.
ராமரின் கதையை சமஸ்கிருதத்திற்கு பின், கம்பர் தமிழில் ராமாவதாரம் என்று எழுதி உள்ளார். பாரதம் முன்னெப்போதும் இல்லாத அளவில், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக வணிகங்கள் நம் நாட்டை, விருப்பமான முதலீட்டு இடமாகவும், வினியோக சங்கிலியில், முக்கிய இணைப்பாகவும் பார்க்கின்றன.
இந்த வாய்ப்பை, நம் மாநிலம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசியப் பணியில் நாம் ஒரே குடும்பமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ள முடியாத சமூகப் பாகுபாடுகள், அதனால் ஏற்படும் வன்முறைகள் குறித்த, இடைப்பட்ட ஊடக அறிக்கைகள், மிகவும் வேதனை அளிக்கின்றன.
நம் இளைஞர்கள் சிலர், பொது இடங்களில் ஜாதி கைப்பட்டை அணிவது குறித்த செய்திகள், வேதனைப் படுத்துவதாகவும், வெட்கக்கேடாகவும் உள்ளன. இத்தகைய நடைமுறைகள் மற்றும் நடத்தைகள், மிகவும் பிற்போக்குத் தனமானவை. தமிழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகள், இதை விரைவில் ஒழிக்க, உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'பிரிவினையை தகர்த்தெறியட்டும்!'
சக குடிமக்கள் அனைவருக்கும்,
குடியரசு நாள் வாழ்த்துகள். நம் இந்திய நாட்டின் அடையாளமாக விளங்கும்
பன்மைத்துவம், சமத்துவம், ஒற்றுமை ஆகியவற்றின் மீதான, நம் உறுதிப்பாட்டினை
புதுப்பித்துக் கொள்வோம். இந்த ஆண்டு இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும்
வகையில், அனைவரையும் உள்ளடக்கிய நோக்கை தழுவி, பிரிவினைக் கொள்கைகளை
தகர்த்தெறியட்டும்.
- முதல்வர் ஸ்டாலின்.

