ADDED : அக் 02, 2025 01:09 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் பணம் பட்டுவாடா செய்த விவகாரத்தில் வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
கேரளாவில் 71 வனசரக அலுவலகங்களில் செப்.,27ல் 'ஆப்ரேசன் வன பாதுகாப்பு' என்ற பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தெரிய வந்த நிலையில், மிகவும் கூடுதலாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள வனசரக அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளுக்கும் இடையில் ரூ.லட்சக் கணக்கில் பணம் பட்டுவாடா நடந்தது அம்பலமானது.
குறிப்பாக இம்மாவட்டத்தில் வல்லகடவு வனத்துறை அதிகாரி அருண் கே.நாயர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் கடந்த ஜூன் முதல் மூன்று மாதங்களில் ரூ.72.8 லட்சம் வாங்கியதும், அவர் கூறியபடி எடப்பள்ளி பகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபனத்திற்கு ரூ.1.36 லட்சம் கொடுத்ததும் தெரியவந்தது. அதே போல் தேக்கடி வனத்துறை அதிகாரி ஷிபிக்கு ஒப்பந்ததாரர் பல வங்கி கணக்குகளில் ரூ.31 லட்சத்து 8 ஆயிரத்து 500 செலுத்தியதும், வேறு இரு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.1.95 லட்சம் நேரடியாக வாங்கியதும் தெரியவந்தது.
இதுகுறித்து பெரியாறு புலிகள் காப்பகத்தில் (கிழக்குப்பிராந்தியம்) உதவி இயக்குனர், இருவரிடமும் விசாரணை நடத்தி முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் வனத்துறையில் ஒப்பந்தாரர்கள் மூலம் நடக்கும் பணிகளுக்கு நிதி கிடைக்காத பட்சத்தில், நிதியுதவி வழங்கி உதவியதாகவும், அதனை அவர்கள் திரும்ப கொடுத்ததாகவும் இருவரும் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில் இருவரையும் பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்து வனத்துறை உயர் அதிகாரி ராஜேஷ் ரவீந்திரன் உத்தரவிட்டார்.
இது தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டு வாரங்களில் உள்துறையிடம் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

