தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாமல் அவதூறு பரப்புகின்றனர் : முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாமல் அவதூறு பரப்புகின்றனர் : முதல்வர் ஸ்டாலின் காட்டம்
UPDATED : மே 30, 2025 01:07 PM
ADDED : மே 30, 2025 12:13 PM

சென்னை: 'தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சியினர் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது கடிதம்: ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்குப் பொதுக்குழு தொடங்குகிறது. அதற்கேற்ப பொதுக்குழு உறுப்பினர்களான கட்சியினர் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உரிமை மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு கட்சியினர் காலை 8 மணிக்கு வந்து அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியான நேரத்தில் பொதுக்குழு தொடங்கிட முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.
தீர்மானங்கள்
தமிழகத்தின் வளர்ச்சியையும் தீர்மானிக்கவிருக்கும் தீர்மானங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய உரை என மதுரை பொதுக்குழு நடைபெறவிருக்கிறது.
2026ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளைத் தீர்மானித்திடவும், அதனை ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கட்சியினரை பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம். பொதுத்தேர்தலில் வென்றிடுவோம். அவதூறுகள்
தி.மு.க. அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், ரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.