ஆஸ்பிரின், பாராசிட்டமல் மாத்திரை டாக்டர் பரிந்துரையின்றி சாப்பிடாதீர்
ஆஸ்பிரின், பாராசிட்டமல் மாத்திரை டாக்டர் பரிந்துரையின்றி சாப்பிடாதீர்
UPDATED : மார் 20, 2025 06:08 AM
ADDED : மார் 20, 2025 05:59 AM

சென்னை: 'கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, ஆஸ்பிரின், பாராசிட்டமல் மாத்திரைகளை, டாக்டர் பரிந்துரையின்றி உட்கொள்ள வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
கோடை காலத்தில், அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் உப்பு கலந்த எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை, எடுத்துக் கொள்ளலாம். வியர்வை எளிதில் வெளியேறும்படி, மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமுள்ள, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
மயக்கம், உடல்சோர்வு, அதிக தாகம், தலைவலி, மணிக்கட்டு, அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து, உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.
வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, காய்ச்சலை குறைக்கும் நோக்கத்துடன், பாராசிட்டமல், ஆஸ்பிரின் ஆகிய மாத்திரைகளை வழங்கக் கூடாது. டாக்டர் பரிந்துரைப்படி மட்டுமே, மாத்திரை, மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறியதாவது:
'வெப்ப வாதம்' பாதிக்கப்பட்டு, மயக்கம் அடைந்திருந்தாலோ, உடல் சோர்வாக காணப்பட்டாலோ, உடனடியாக நிழல் தரக்கூடிய இடங்களில், ஒரு பக்கமாக படுக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு, இளநீர், மோர் அருந்த கொடுத்து, உடல் சூட்டை குறைக்கலாம். நீரில் நனைத்த துணியை வைத்து, உடல் சூட்டை தணிக்க வேண்டும்.
காய்ச்சல் என நினைத்து, ஆஸ்பிரின், பாராசிட்டாமல் மாத்திரை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு வேளை கொடுத்தால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.