மனுக்களுக்கு 30 நாளில் பதில் அளிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
மனுக்களுக்கு 30 நாளில் பதில் அளிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 19, 2025 12:34 AM
சென்னை:'விண்ணப்பங்கள் மீது, 30 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கியது.
அப்போது வழக்கறிஞர் இளைய பெருமாள் ஆஜராகி, ''திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவிலில் மணி விழா, பூஜைகள் போன்றவற்றுக்கு, ரசீது வழங்காமல் பக்தர்களிடம் இருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக, அறநிலையத்துறை செயலர், கமிஷனர் ஆகியோரிடம், ஸ்ரீ அமிர்தா நாராயண பெருமாள் கோவிலின் அறங்காவலர் ரத்தினகுமார் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொது நலவழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என, முறையீடு செய்தார்.
இதை கேட்ட தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையிலான அமர்வு, 'அரசுக்கு அளிக்கும் புகார், விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பதிலளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
'இருப்பினும், அந்த அரசாணையின்படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால், ஏராளமான பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
'பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்' என, எச்சரித்தனர்.
'இதையடுத்து, இந்த விவகாரத்தை, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் உறுதி அளித்தார்.

