வங்கதேச கலவரத்தில் இருந்து தப்பியது எப்படி?: கண்ணீருடன் விளக்கிய தமிழக மாணவிகள்
வங்கதேச கலவரத்தில் இருந்து தப்பியது எப்படி?: கண்ணீருடன் விளக்கிய தமிழக மாணவிகள்
ADDED : ஜூலை 22, 2024 03:46 PM

கிருஷ்ணகிரி: வங்கதேச கலவரத்தால், தொலைத்தொடர்பு கூட இல்லாமல் மூன்று நாட்கள் பயத்துடன் அவதிப்பட்டோம் என வங்கதேசத்தில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மாணவியர் கண்ணீருடன் கூறினர்.
வங்கதேசத்தில், போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலவரம் வெடித்து, 130க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பதற்றத்தை தணிக்க வங்கதேச ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் படிக்க சென்று தவித்த இந்திய மாணவ, மாணவியரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு வருகிறது.
வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க சென்று தவித்த தமிழகத்தை சேர்ந்த, 49 மாணவ, மாணவியர் நேற்று பத்திரமாக திரும்பினர். இதில், கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரை சேர்ந்த பிரீதா வாசுதேவன், 25 (பயிற்சி மருத்துவர்), இறுதியாண்டு மாணவியர்களான ஹவுசிங்போர்டு ஸ்ரீநிதி ராமமூர்த்தி, 23, ஆலப்பட்டி தக்சண்யா ஜேம்ஸ், 22 மற்றும் கிருஷ்ணகிரியில் நால்வர், டேம்ரோடு பகுதியில் இருவர், இருமத்தூர் பகுதியில் ஒருவர், போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவர் உள்பட, 12 பேர் அடங்குவர்.
விடுதியில் முடங்கினோம்
கிருஷ்ணகிரி திரும்பிய மாணவியர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் அனைவரும் வங்கதேசத்தில் சிலேட் பகுதியில் உள்ள மகளிர் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறோம். இதில், சிலர் மருத்துவம் முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராகவும் உள்ளனர். எங்கள் கல்லூரியில் மட்டும் இந்தியாவை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஜூலை 17ல், வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பரவியது. இதன் விபரங்கள், கலவரங்கள் குறித்து முழுமையாக தெரிவிப்பதற்குள் இணையதளம் முடங்கியது.
மொபைல் உள்பட அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. நாங்கள் தங்கியுள்ள விடுதியில் உணவு கூட வழங்கப்படவில்லை. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டது. நாங்களே உணவு தயார் செய்தவாறு விடுதியில் தங்கியிருந்தோம்.
நிலைமை மோசம்
கடந்த இரு நாட்கள் முன்பு, கலவரம் தீவிரமடைந்ததை துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டோம். எங்கள் பெற்றோரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கள் விடுதியில் இருந்த மாணவி தக்சண்யாவின் மொபைலில் மட்டும் அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது. அந்த மொபைல் மூலம், 60 மாணவியர் தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர்.
பயத்துடன் இருந்த எங்களை விடுதி, கல்லூரி நிர்வாகிகள் எவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்ல முடியுமோ செல்லுங்கள், நிலைமை மோசமாக உள்ளது என்றனர். இதனால் மேலும் பதற்றமடைந்தோம். டி.வி.,யில் பார்த்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவு தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் உடனடியாக எங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பெயர், விபரங்களை மட்டும் கேட்டனர். அதன்பின் தமிழக அரசு உதவியோடு, எங்களது பாஸ்போர்ட் விபரங்கள் முதல் விமான டிக்கெட் வரை அவர்களே ஏற்பாடு செய்தனர்.
முடிவுக்கு வந்த மூன்று நாள் பதற்றம்
கடந்த, ஜூலை 20, மதியம், 3 மணியளவில் சிலேட் பகுதியிலிருந்து கிளம்பிய நாங்கள், சிலாங், தமாபில், தவுகி எல்லை வழியாக கவுஹாத்திக்கு ராணுவ பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டோம். பின்னர் கவுஹாத்திலிருந்து விமானம் மூலம் கிளம்பிய நாங்கள் சென்னை வந்தோம். எங்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். மூன்று நாட்கள் துப்பாக்கி சத்தம், கலவர பீதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
வங்கதேசத்தின் டாக்கா, மைமென்சிங் பகுதிகளிலும், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்லூரிகளில், படித்து வருகின்றனர். அப்பகுதிகளில் கலவரம் தீவிரமடைந்துள்ளதால், அவர்களை மீட்கவும் அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.