ADDED : பிப் 29, 2024 11:06 PM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்து 123 கோடி ரூபாயை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
சீன நாட்டு செயலிகள் வாயிலாக, 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தப்படுகிறது. கடன் வழங்கி கந்து வட்டி வசூலிக்கப்படுகிறது. 'ஆன்லைன்' விளையாட்டு வாயிலாகவும் பணம் சுருட்டப்படுகிறது. இதன் பின்னணியில் போலி நிறுவனங்கள் உள்ளதாக புகார் எழுந்தது.
இது குறித்து, கேரளா மற்றும் ஹரியானா மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் செயல்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, பிப்., 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், தமிழகத்தில் சென்னை, மும்பை, கொச்சி உட்பட, 10 இடங்களில் சோதனை செய்தனர்.
அப்போது, நம் நாட்டில் இருந்து சீன செயலிகள் வாயிலாக சுருட்டப்படும் கோடிக்கணக்கான ரூபாய், 'கிரிப்டோ கரன்சி' வாயிலாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
அதற்காக சிங்கப்பூரில், 'ஷெல் கம்பெனி' எனப்படும் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. அதேபோல, சென்னை மற்றும் மும்பையிலும் போலி நிறுவனங்கள் செயல்பட்டு வந்துள்ளன.
இதன் பின்னணியில், 'நியும் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த 123 கோடி ரூபாயை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
மும்பையில் வசித்து வரும் நியும் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

