ADDED : பிப் 29, 2024 11:03 PM
சென்னை:கூட்டுறவு துறையின் கீழ், 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. அவை, விவசாயிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாசியம், கூட்டு உரங்கள், டி.ஏ.பி., ஆகிய உரங்களை விற்பனை செய்கின்றன.
இந்த உரங்களை, கூட்டுறவு சங்கங்களில் உள்ள விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து, விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதை பின்பற்றாமல், பல சங்கங்களில் பதிவேடுகளில் பதிவு செய்து விற்கப்படுகின்றன.
இதனால், சங்கங்களின் உர இருப்பு பதிவேடு விபரத்திற்கும், விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பு விபரத்திற்கும் வித்தியாசம் இருப்பதாக புகார் எழுகிறது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உத்தரவின்படி, சிறப்பு படை அதிகாரிகள் நேற்று, அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்களிலும் தீவிர ஆய்வு மேற்கண்டனர்.
அப்போது, சங்கங்களில் உள்ள உர இருப்பும், விற்பனை முனைய கருவியில் உள்ள உர இருப்பும் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு அறிக்கையை பொறுத்து, தவறு செய்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

