நாட்டிலே தமிழகத்தில் தான் அதிக ஆலைகள், வேலைவாய்ப்புகள்: நயினாருக்கு டிஆர்பி ராஜா பதில்
நாட்டிலே தமிழகத்தில் தான் அதிக ஆலைகள், வேலைவாய்ப்புகள்: நயினாருக்கு டிஆர்பி ராஜா பதில்
ADDED : செப் 02, 2025 07:49 AM

சென்னை: இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழகம் தான் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முதல் நாளிலேயே ரூ3,201 கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் போட்டுள்ள நிலையில், அதில் ஒரு நிறுவனமான Knorr-Bremse சென்னையில் உள்ள நிறுவனம் என்றும் அதனுடன் ஜெர்மனியில் போய் ஒப்பந்தமா என நயினார் கேட்டிருப்பது, தொழில்துறை சார்ந்த அவருடைய புரிதல் எவ்வளவு குழந்தைத்தனமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.
Knorr Bremse 120 ஆண்டுகால வரலாறு கொண்ட ஜெர்மானிய நிறுவனம். இவர்களுக்கு தமிழகத்தில் உற்பத்தி சார்ந்த எந்த தொழிற்சாலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில் திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் அவர்களது முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகம் துவங்கப்பட்டது.
தற்போது 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் அவர்களது முதல் ரயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய உயர் தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மகாராஷ்டிரா பாஜ முதல்வர் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் இருந்து 15 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தார் என்கிறார் பாஜ மாநிலத் தலைவர். தேவையில்லாமல் வாயை கொடுத்து இவரும் மாட்டிகொள்கிறார், அவரது தோழர்களையும் மாட்டி விடுகிறார்.
டாவோஸ் நகரிலிருந்து மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்தியத் தொழில் நிறுவனங்களுடன் அதுவும் அவர்களது தலைநகரமான மும்பையிலேயே உள்ள reliance நிறுவனத்தோடு வீடியோ கான்பரன்சில் பேசி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட கதைகளை தமிழக பாஜ தலைவர் அறிந்துகொள்வது நல்லது.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழகம்தான் என்பதையும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்து சாதனை படைத்திருப்பதையும் பாஜ தலைமையிலான மத்திய அரசே புள்ளி விவர அறிக்கையுடன் சான்றிதழ் தந்துள்ள நிலையில், தமிழகத்தை இழிவுபடுத்தும் போக்கை இனியாவது கைவிட்டு, உண்மை தரவுகளை அறிந்துகொள்ள ஓரளவாவது முயற்சி எடுக்குமாறு தமிழக பாஜ தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் டிஆர்பி ராஜா கூறி உள்ளார்.