'அனைவரையும் ஒன்றுபடுத்தி பார்க்க விரும்புகிறார் மோடி !'
'அனைவரையும் ஒன்றுபடுத்தி பார்க்க விரும்புகிறார் மோடி !'
ADDED : ஜன 09, 2024 10:29 PM

சென்னை:''நாட்டில் உள்ள அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி பார்க்க, பிரதமர் மோடி விரும்புகிறார்,'' என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பேசினார்.
சென்னை கோடம்பாக்கத்தில், 'நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற, மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களுக்கான கடன் உதவி காசோலைகளை, பியுஷ் கோயல் வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
திருவள்ளுவர் சொல்லிய வழியில், பிரதமர் மோடி தானும் நடந்து, ஆட்சியும் நடத்துகிறார். ஏழை எளிய மக்களுக்கும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும், பல நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்.
சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளாகியும் கிடைக்காமல் இருந்த உதவிகள், இன்று எல்லாரையும் சென்றடைகின்றன.
விவசாயிகளும், இளைஞர்களும், பெண்களும் மோடியை தன் சகோதரராக பார்க்கின்றனர். அவர் நம் அனைவருக்கும், 'அண்ணா' போன்றவர். பா.ஜ.,வில் இருக்கும் அனைவரும் தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை நினைத்து பெருமைப்படுகிறோம்.
இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக திகழ வேண்டுமெனில், அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற வேண்டும். நாட்டில் உள்ள அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி பார்க்க, பிரதமர் மோடி விரும்புகிறார்.
மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ள ஏராளமான திட்டங்கள், தகுதி உடையவர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே, பிரதமரின் விருப்பம். நீங்கள் பயன் பெற்றது போல மற்றவர்களும் பயன் அடைய, மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்து, உங்களுக்கு தெரிந்தவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.
தமிழகத்தில், 3.5 கோடி மக்களுக்கு, ரேஷன் வாயிலாக இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. 1.5 கோடி மக்கள், ஜன்தன் வங்கி கணக்கு துவங்கி பயன் பெற்றுள்ளனர்.
குழாய் வாயிலாக குடிநீர் வழங்கும் திட்டத்தில், 1 கோடி மக்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 51 லட்சம் பேர் என, மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, தமிழக மக்கள் பயன் பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

