ADDED : ஜன 26, 2024 12:40 AM
மதுரை:திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் விதிமீறல் கட்டுமானத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கலான வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றக்கோரி அல்லது அனுமதிக்கு புறம்பாக விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொண்டது தொடர்பாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற கட்டடங்களுக்கு எதிராக மாநகராட்சி அல்லது நகராட்சி கமிஷனர்கள் கடும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது திருப்தியளிக்கும் வகையில் இல்லை.
அனுமதியற்ற கட்டுமானங்களை கண்காணித்து அகற்ற, உயர்நிலைக் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவை பிறப்பிக்க இதுவே சரியான நேரம்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாநகராட்சிகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அனுமதியற்ற கட்டுமானங்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கைகளை பிப்., 1ல் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

