செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
UPDATED : ஜூலை 09, 2024 06:52 PM
ADDED : ஜூலை 09, 2024 06:41 PM

சென்னை: குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டவர் காங்.கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை என பா.ஜ., மாநில தலைவர் அண்ணமாலை குற்றம்சாட்டியுள்ளார்.
2001ம் ஆண்டிலிருந்து செல்வபெருந்தகை மீது போடப்பட்ட பல்வேறு குற்றவழக்குகளை பட்டியலிட்டு அண்ணாமலை ‛‛எக்ஸ்'' வலைதளத்தில் கூறியது,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி வழி வந்த செல்வப்பெருந்தகை கடந்து வந்த பாதை :
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி
2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)
2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 - கொலைமுயற்சி
2003வழக்கு எண் 138/2003 - தாக்குதல்
2003வழக்கு எண் 277/03 - கொலை மிரட்டல்
2003வழக்கு எண் 451/2003 இபிகோ 324 - பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 - கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908.
இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 - கலவரம் செய்தல், இபிகோ 148 - பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 - கொலைமிரட்டல்
கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.
குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? அவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பதிவேற்றியுள்ளார்.