9 மாதத்துக்கு முன் கட்டி திறக்கப்பட்ட பள்ளி மேற்கூரை பெயர்ந்ததால் அதிர்ச்சி
9 மாதத்துக்கு முன் கட்டி திறக்கப்பட்ட பள்ளி மேற்கூரை பெயர்ந்ததால் அதிர்ச்சி
ADDED : செப் 23, 2025 06:50 AM

திருச்சி: துறையூர் அருகே அரசு பள்ளியில், 9 மாதத்துக்கு முன் கட்டி திறக்கப்பட்ட அறையின் மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்தது. விடுமுறை நாள் என்பதால், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சிங்களாந்தபுரத்தில் யூனியன் துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 34 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளிக்கு, இரண்டு வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு, ஒன்பது மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்த, நேற்று காலை வகுப்பறைகளை பள்ளி தலைமை ஆசிரியர் திறந்தார். அப்போது, ஒன்றாம் வகுப்பு முதல், மூன்றாம் வகுப்பு வரை நடக்கும் அறையின், மேற்கூரை காங்கிரீட் பெயர்ந்து விழுந்து, மாணவர்கள் உட்காரும் ஸ்டீல் சேர்கள், எல்.இ.டி., டிவி, கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை சேதமடைந்திருந்தன. தலைமை ஆசிரியர், கல்வித்துறை அதிகாரி, யூனியன் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு வந்து, காங்கிரீட் பெயர்ந்து விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, துறையூர் வட்டார கல்வித்துறை அலுவலர்கள், யூனியன் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த வகுப்பறை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜனவரியில் தான் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி விடுமுறை நாளில், காங்கிரீட் பெயர்ந்து விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவியர் தப்பினர்.