மத்திய அரசு பணிக்கு தாவும் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
மத்திய அரசு பணிக்கு தாவும் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
ADDED : ஜூன் 24, 2025 11:19 PM
சென்னை:மத்திய அரசு பணிக்கு தாவும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழக காவல் துறையில் ஆயுதப்படை டி.ஜி.பி.,யாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டார். அதேபோல, டி.ஐ.ஜி.,க்கள் பொன்னி, ரம்யா பாரதி ஆகியோரும் அயல்பணியாக, மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டனர்.
சென்னை போலீசில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பணிபுரிந்து வந்த ஐ.ஜி., சுதாகரும், மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டார். அந்த வரிசையில், டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணனும், மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
பதவி உயர்வு தொடர்பாக, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அயல்பணியாக, மத்திய அரசு பணிக்கு செல்வது வழக்கம் தான். ஆனால், மகேஷ்குமார் அகர்வால், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், அதிருப்தி காரணமாகவே மத்திய அரசு பணிக்கு சென்றுள்ளனர்.
கடந்தாண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக, அப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த மகேஷ்குமார், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அதேபோல பாலகிருஷ்ணன், கோவை கமிஷனர் மற்றும் மத்திய மண்டல ஐ.ஜி.,யாக பணியாற்றியவர். இவரை நிர்வாக பிரிவுக்கு மாற்றியதால், 'டம்மி' பொறுப்பு வழங்கப்பட்டதாக கருதினார்.
இவர்களை போல இன்னும் சில ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மத்திய அரசு பணிக்கு தாவ விருப்பம் தெரிவித்து காத்திருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.