ADDED : ஜூன் 29, 2024 06:42 AM

சென்னை: 'தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பில்லை' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 4ம் தேதி வரை, கனமழைக்கு வாய்ப்பில்லை. பல இடங்களில் மிதமான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் வரும், 2ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகும்.
வங்கக்கடலின் மத்திய மேற்கு, வடக்கு ஆந்திரா, வடமேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய அரபிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, 2ம் தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில், ஜூன் 1 முதல் நேற்று வரை தென் மேற்கு பருவமழை, இயல்பு அளவான, 4.8 செ.மீ.,க்கு பதில், 10.7 செ.மீ., பெய்துள்ளது. இது, இயல்பைவிட, 124 சதவீதம் அதிகம். மாவட்டங்களில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பு அளவான 2 செ.மீ.,க்கு பதில், 12 செ.மீ., பெய்துள்ளது.