ரூ.3,517 கோடியில் பல்வேறு திட்டங்கள்: ஸ்டாலின் தகவல்
ரூ.3,517 கோடியில் பல்வேறு திட்டங்கள்: ஸ்டாலின் தகவல்
ADDED : ஜூன் 11, 2025 01:15 AM
சென்னை:''உலக வங்கி நிதியுதவியுடன், தமிழகத்தில் 3,517 கோடி ரூபாயில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தரமணியில், உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத்தை திறந்து வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி என, பல்வேறு துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு டில்லிக்கு வெளியே, தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை, உலக வங்கி சென்னையில்தான் அமைத்தது. உலக வங்கி உடனான, நம் நீண்ட நெடிய உறவு, பல்வேறு துறைகளில், பல நற்பலன்களை வழங்கி இருக்கிறது.
சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி, பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி இருக்கிறது. பணிபுரியும் பெண்களுக்காக தமிழகம் முழுதும் துவங்கி இருக்கும் தோழிகள் விடுதிகள் திட்டத்திலும், உலக வங்கியின் பங்கு இருக்கிறது.
கூடிய விரைவில் சென்னையில் தாழ்தள எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான திட்டத்திலும் உலக வங்கி நமக்கு உதவி உள்ளது. தமிழ்நாடு கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டம், உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இதன் வாயிலாக, பேரிடர்களை தாங்கக் கூடிய உள் கட்டமைப்புகளையும், முன்கூட்டியே எச்சரிக்கை தரக்கூடிய அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறோம்.
இந்தியாவிலேயே அதிகமாக நகரமயமாக்கல் நடக்கும் மாநிலம் தமிழகம். வரும் 2030ம் ஆண்டுக்குள் 63 சதவீத தமிழக மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்பர். வெறும் கடனுதவி என, உலக வங்கியின் பங்கை நாம் சுருக்கி பார்க்க முடியாது.
அதையும் தாண்டி, நீடித்த நிலையான, மேம்படத்தக்க வளர்ச்சியை, தமிழகம் அடைய வேண்டும். வரும் காலத்தில் உலக வங்கி உதவியுடன், 3,517 கோடி ரூபாய் மதிப்பில் சில திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த போகிறோம்.
தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான். விவசாயம் அல்லாது, வளர்ந்து வரும் மற்ற துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,185 கோடி ரூபாய் மதிப்பில், உலக வங்கி உதவியுடன், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
உலக வங்கியுடன் சேர்ந்து, இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற, என்னுடைய அரசு ஆர்வமாக இருக்கிறது. அதற்கான 'பார்ட்னர்ஷிப்' தொடர வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், உலக வங்கியின் மேலாண் இயக்குநர் வென்சாய் ஜாங், இந்தியாவிற்கான இயக்குநர் அகஸ்டே, தமிழக அரசு தலைமைச் செயலர் முருகானந்தம், உலகவங்கி சென்னை மையத் தலைவர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.