கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணைக்கு 44 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
ADDED : ஜூன் 27, 2025 08:57 AM

சேலம்: கர்நாடகா அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் அருவி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., எனப்படும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் 121 அடியாக உள்ளது. நீர் இருப்பு 44.322 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 52,829 கனஅடியாக உள்ளது.
கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவு நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து மட்டும் 51 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒகேனக்கல்லுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவே, சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்கிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உள்ளது. நீர் இருப்பு 84.22 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 43,890 கனஅடியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 22,000 கன அடி தண்ணீர் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.