திருவள்ளுவர் சிலை முகத்தை மூடியது யார்?: தமிழ் அமைப்புகள் கண்டனம்
திருவள்ளுவர் சிலை முகத்தை மூடியது யார்?: தமிழ் அமைப்புகள் கண்டனம்
UPDATED : ஜூன் 24, 2024 01:28 PM
ADDED : ஜூன் 24, 2024 12:56 PM

பெங்களூரு: அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன், ஹலசூரு திருவள்ளுவர் சிலையின் முகத்தை துணியால் மூடி அவமதிப்பு செய்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெங்களூரு, ஹலசூரு ஏரிக்கரை அருகில் திருவள்ளுவர் சிலை, 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் திறக்கப்பட்டது. தமிழர் கன்னடர் நட்புறவுக்கு பாலமாக, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பங்கேற்று திறந்தனர்.
கம்பீரம்
ஆண்டுதோறும் சிலை சிறப்பு நாளிலும், திருவள்ளுவர் தினத்திலும் எந்தவொரு பாகுபாடும் பாராமல், தமிழர் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். மொழி, இனம், ஜாதி, மதம், கட்சி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு உலக பொதுமறையை தந்தவர் என்பதை அடையாளம் காட்டும் திருவள்ளுவர் சிலை கம்பீரமாக இருந்து வருகிறது.
ஆயினும், அங்கு உரிய பாதுகாப்பு இல்லை. சுற்றுப்புற பகுதிகளில் சுத்தமும் இல்லை. பராமரிப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று காலை, மர்ம நபர்கள் இச்சிலையின் முகத்தை ஏதோ ஒரு துணியால் மூடியிருப்பதை ஒருவர் பார்த்து உள்ளார். உடனடியாக தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இராசு மாறனுக்கு தகவல் தெரிவித்தார்.
தெய்வமாக வணங்கப்படும் திருவள்ளுவருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ள சம்பவத்தை கேட்டதும், அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மற்ற தமிழார்வலர்களுக்கு தகவல் கொடுத்தவர், திருவள்ளுவர் சிலையை நேரில் வந்து பார்த்தார்.
தமிழார்வலர்கள்
பின் தமிழார்வலர்கள் இணைந்து ஹலகுரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்கிருந்து வந்த இரு போலீசார் அந்த துணியை அகற்றினர். சிலைக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து திருவள்ளுவர் சிலை புனித நீரால் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டது. மாலை அணிவித்து திருக்குறள் ஓதப்பட்டது.
அநாகரிகமான செயல்
பெங்களூரு தமிழ் சங்க முன்னாள் தலைவர் இராசு மாறன் அறிக்கை: பெங்களூரு ஹலசூரு ஏரி அருகில் தமிழ்ச்சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலையின் முகத்தில், முகமூடி போல ஒரு துணி கட்டி வைத்த செயல் கண்டிக்கத்தக்கது. இது வேண்டுமென்றே யாரோ திட்டமிட்டு செய்த செயலாக தோன்றுகிறது.
கர்நாடகாவில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செய்த செயலாகவே கருதுகிறோம். சுய லாபத்திற்காக இழிவான செயலை செய்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, காவல் துறையினர் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை. இது போன்ற அநாகரிகமான செயல் நடக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அரசு பாதுகாப்பு வேண்டும்!
தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் அறிக்கை: திருக்குறள் மனித வாழ்வுக்கு தேவையான அருமருந்து. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சிலையை ஐ.நா., சபை முன் நிறுவ அனைத்து தகுதிகளும் உள்ளன. உலக நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளை உதாரணம் காண்பித்து பேசி உள்ளார். சமீபத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் துாவி வணங்கினார்.
இத்தகைய பெருமைமிக்க திருவள்ளுவர் சிலையை, சிலர் உள்நோக்கத்தில் அவமதிப்பு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. சிலையின் முகத்தை மூடிய நபரை, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் தொடராமல் இருக்க, சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும்.
ஹலசூரு ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அரசு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சட்டப்படி உரிய நடவடிக்கை
பெங்களூரு தமிழ் இலக்கிய பேரவை தலைவர் கடையம் ஆறுமுகம் அறிக்கை:திருவள்ளுவர் இனம், மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, அனைத்து மதத்தினருக்கும், எல்லா மொழியினருக்கும் பொதுவான கருத்துகளை ஈரடிகளில் நமக்கு தந்தவர். அவரது, 1,330 குறள்களில் ஒன்றில் கூட ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரோ அல்லது 'தமிழ்' என்று மொழியின் பெயரோ இல்லாததே இதற்கு சான்று.
இத்தகைய பெருமையுடைய திருவள்ளுவர் சிலைக்கு, களங்கம் ஏற்படுத்திய செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம். இது போன்ற செயல்களால் கவனம் சிதறாமல், மொழி மற்றும் இன ஒற்றுமைக்கான நமது பயணத்தைத் தொடர்வோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.