ஹசீனா தஞ்சம் : இது இரண்டாம் முறை- டில்லி ரகசிய இடத்தில் தோவால் சந்திப்பு
ஹசீனா தஞ்சம் : இது இரண்டாம் முறை- டில்லி ரகசிய இடத்தில் தோவால் சந்திப்பு
UPDATED : ஆக 05, 2024 07:27 PM
ADDED : ஆக 05, 2024 07:01 PM

டாக்கா: இந்தியா தப்பி வந்து,ரகசிய இடத்தில் தங்கியுள்ள ஷேக்ஹசீனாவை டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்லி., முற்றுகை
வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா 76, இந்தியா தப்பி வந்துள்ளார். இதனிடையே வங்கதேச பார்லிமென்டை மாணவர்கள் , போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.முன்னதாக பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், போராட்டக்காரர்கள், அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மாணவர்கள், போராட்டக்காரர்களால் வங்கத தேச தலைநகர் டாக்காவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் இந்தியா தப்பி வந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டில்லியில் லஜ்பத் நகரில் ரகசிய இடத்தில் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது இரண்டாம் முறை
இதே போன்று 49 ஆண்டுகளுக்கு முன் ஷேக் ஹசீனா, தன் குடும்பத்துடன் இந்தியாவிற்கு தஞ்சமடைய வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஹசீனாவின் தந்தையும்,வங்கதேச நாட்டை நிறுவியவரும் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான், உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 18 பேர் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஹசீனா தன் கணவர் வாஸ் மையாக், தன் குழந்தைகள், மற்றும் உடன் பிறந்த சகோதரி ஷேக் ரஹானா ஆகியோருடன் இந்தியாவிற்கு தப்பி வந்தார். டில்லி பண்டாரா சாலையில் உள்ள ரகசிய இல்லத்தில் பல ஆண்டுகள் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹசீனாவுடன் அஜித் தோவல் சந்திப்பு
இதற்கிடையே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தங்கி உள்ள ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.