ஷேக் ஹசீனா சமூக வலைதளத்தில் பேசக்கூடாது; முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் மோடி
ஷேக் ஹசீனா சமூக வலைதளத்தில் பேசக்கூடாது; முகமது யூனுஸ் கோரிக்கையை நிராகரித்தார் மோடி
ADDED : ஜூன் 12, 2025 07:21 AM

டாக்கா: '' ஷேக் ஹசீனா வங்கதேச மக்கள் மத்தியில் சமூக வலைதளத்தில் பேசக்கூடாது என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கட்டுப்படுத்த முடியாது என்று கூறிவிட்டார்,'' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
லண்டனில் உள்ள சாத்தம் இல்லத்தில், முகமது யூனுஸ் பேசியதாவது: பிரதமர் மோடியுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஷேக் ஹசீனாவை இந்தியாவில் வைத்திருப்பது உங்கள் விருப்பம். அவரை கைவிட வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. ஷேக் ஹசீனா சமூகவலைதளத்தில் பேசுவதை நிறுத்த வலியுறுத்தினேன். இது சமூக வலைதளம். அதை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது என பிரதமர் மோடி கூறிவிட்டார்.
நோட்டீஸ்
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் இந்திய அரசிற்கு கடிதம் எழுதி உள்ளது. சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது. தீர்ப்பாயம் விசாரணை நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அவர் செய்த குற்றங்களுக்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இன்னும் பல குற்றங்கள் விசாரணையில் தெரியவரும். நாங்கள் ஒரு சட்ட நடைமுறையைப் பின்பற்றுகிறோம்.
சட்ட நடவடிக்கை
அது சட்டப்பூர்வமாகவும், மிகவும் முறையாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கோபத்தில் எதையும் செய்யக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். இந்தியாவுடன் சிறந்த உறவை நாங்கள் கட்டியெழுப்ப விரும்புகிறோம். அவர்கள் எங்கள் அண்டை நாடு. அவர்களுடன் எங்களுக்கு எந்த அடிப்படை பிரச்னையும் இருக்க விரும்பவில்லை.
பதட்டம், கோபம்
ஆனால் சில பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் வங்கதேசத்தை மிகவும் பதட்டமாகவும், மிக கோபமாகவும் ஆக்குகிறது. இந்தக் கோபத்தைக் கடக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.
நாம் அமைதியாக இருக்க முயற்சித்தாலும், திடீரென்று அவர்கள் ஏதாவது சொல்கிறார்கள், ஏதாவது செய்கிறார்கள், கோபம் மீண்டும் வருகிறது. இவ்வாறு முகமது யூனுஸ் கூறினார்.