எவ்வளவு அடித்தாலும் திருந்தாத பாக்., பயங்கரவாத மாநாட்டில் பூச்சாண்டி
எவ்வளவு அடித்தாலும் திருந்தாத பாக்., பயங்கரவாத மாநாட்டில் பூச்சாண்டி
UPDATED : மே 15, 2025 04:09 PM
ADDED : மே 15, 2025 12:19 AM

கராச்சி:'டில்லியில் காலை உணவு சாப்பிட்டு விட்டு, எங்கள் கொடியை ஏற்ற விரும்புகிறோம். பாகிஸ்தானுடன் மோதும் முன், 100 முறை யோசிக்க வேண்டும்' என, அந்நாட்டு பயங்கரவாத அமைப்பு கூட்டத்தில் மத அடிப்படைவாதிகள் வாய் சவடால் விட்டுள்ளனர்.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் நம்மிடம் மரண அடி வாங்கியும் பாகிஸ்தான் திருந்துவதாக தெரியவில்லை. பாக்., பயங்கரவாதிகளை ஆதரித்து வரும் திபா - இ - வதன் கவுன்சில் சார்பில், கராச்சியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் மாநாடு நடந்தது.
இதில், லஷ்கர் - இ - தொய்பா, அஹ்ல் - இ - சுன்னத் வால் ஜமாத் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினரும், பல்வேறு முஸ்லிம் மதகுருமார்களும் பங்கேற்று, இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை பேசினர்.
குறிப்பாக, மதகுருமார்களில் ஒருவரான முப்தி தாரிக் மசூத் என்பவர் பேசுகையில், 'நம் எதிரியான இந்தியா, நம் ராணுவத்தை மதம் சார்ந்து செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
'துரோகம் செய்பவர்கள் என குறிப்பிட்டுள்ளது. நம் ராணுவம் மதச்சார்பற்றதல்ல; தியாகத்தில் ஆர்வம் கொண்ட மதம் மற்றும் இஸ்லாமின் பெயரால், அல்லாவின் பெயரால் உயிர்த் தியாகம் செய்யும் ராணுவம்' என, குறிப்பிட்டுள்ளார்.
ஜாமியத் உலமா - இ - இஸ்லாம் அமைப்பின் பொதுச்செயலர் அல்லமா ரஷீத் மஹ்மூத் சூம்ரோ பேசுகையில், 'நாங்கள் காலை உணவை டில்லியில் சாப்பிட விரும்புகிறோம். அங்கு பாகிஸ்தான் கொடியை ஏற்ற விரும்புகிறோம். எங்களுடன் மோதுவதற்கு முன், 100 முறை யோசிக்க வேண்டும்' என்றார்.
பயங்கரவாத அமைப்பும், மதகுருமார்களும் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதை அந்நாட்டு அரசோ, ராணுவமோ கண்டிக்கவில்லை. இதன் வாயிலாக, அவர்களின் வெறுப்பு பேச்சுக்கு அனுமதி வழங்கியுள்ளதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.