UPDATED : ஜூலை 12, 2024 10:31 AM
ADDED : ஜூலை 12, 2024 10:26 AM

நமக்கு தெரியாமலே பிளாஸ்டிக்கே உணவு, சுவாசமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் பிளாஸ்டிக்கிற்கு பெரும் பங்கு உள்ளது.
அதுபோல அதை பயன்படுத்தி துாக்கி எறியப்படும், பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிப்படும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் நிலம், நீர், ஆகாயம் என உலகின் அனைத்து இடங்களிலும் பரவி விட்டது. நமக்கு தெரியாமலேயே சாப்பிடும், சுவாசிக்கும் போது மனிதனின் உடல் உறுப்புக்குள்ளும் நுழைந்தது பல ஆய்வுகளில் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
இந்நிலையில் பிளாஸ்டிக் நுண்துகள்களை அதிகம் சாப்பிடும் நாடு எது? பிளாஸ்டிக் நுண்துகள் துாசியை சுவாசிப்பதில் எந்த நாடு அதிகம் என 109 நாடுகளில் அமெரிக்காவின் கார்னல் பல்கலை ஆய்வு நடத்தியது. இதில் பிளாஸ்டிக் நுண்துகளை சாப்பிடும் நாடுகளில் மலேசியாவும், சுவாசிப்பதில் சீனாவும் முதலிடத்தில் உள்ளன.
இதிலிருந்து பிளாஸ்டிக் மாசு எந்தளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது தெரிகிறது. இந்தியாவில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. 5 மி.மீ., ஐ விட சிறியது தான் பிளாஸ்டிக் நுண் துகள் என விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர்.
15 கிராம்
மலேசியாவில் ஒரு மாதத்துக்கு 15 கிராம் அளவிலான பிளாஸ்டிக் நுண் துகளை சாப்பிடுகின்றனர். இதில் பெரும்பாலானவை கடல் உணவுகளில் இருந்துதான் வருகிறது. இந்தோனேஷியாவில் ஒரு மாதத்துக்கு 13 கிராம், அமெரிக்காவில் 2.4 கிராமாக உள்ளது. இப்பட்டியலில் கடைசி (106) இடத்தில் இருக்கும் பராகுவேயில் 0.85 கிராமாக உள்ளது.
28 லட்சம்
சீனா, மங்கோலியாவில் ஒரு நாளைக்கு 28 லட்சம் பிளாஸ்டிக் நுண் துகள் சுவாசிக்கப்படுகிறது. இது பிரிட்டன், அயர்லாந்தில் 7.91 லட்சம், அமெரிக்காவில் 3 லட்சமாக உள்ளது. இப்பட்டியலில் கடைசி (106) இடத்தில் தென்கொரியா உள்ளது.