/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
சமையலறையில் சத்தம் இல்லாமல் சாதிக்கும் லதா
/
சமையலறையில் சத்தம் இல்லாமல் சாதிக்கும் லதா
ADDED : ஜூன் 02, 2025 12:20 AM

மேலே குறிப்பிட்டுள்ள தலைப்பை படித்தவர்களுக்கு லதாவை பற்றி தெரிந்து கொள்ள சுவாரசியமாக இருந்திருக்கும். தங்கள் சுவாரசியத்திற்கு சற்றும் பஞ்சம் இல்லாதது, லதாவின் தினசரி வாழ்க்கை என சொன்னால் அது மிகையல்ல.
மங்களூரு, சிலிம்பியை சேர்ந்தவர் லதா உடுபா, 48. இவரது வீட்டில் காலையில், அலாரம் அடிப்பது போல 'விசில் சப்தம்' அடித்து கொண்டே இருக்கும். காரணம், இவர் செய்யும் தொழில் அப்படி. லதா தன் வீட்டிலேயே உணவு சமைத்து பரிமாறி வருகிறார். இவரிடம் உள்ள வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களே. அவர்களுக்கு சேவை செய்வதே இவரின் பணியாக உள்ளது.
'ஹோம் மேட்'
ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் பல இருந்தும் லதாவின் சமையலை பலரும் விரும்புவதற்கு காரணம், இவரது 'ஹோம் மேட்' ஸ்டைலே காரணம். இவர், உணவில் சுவைக்காக ரசாயனங்கள், சுவையூட்டிகள் எதையும் சேர்ப்பதில்லை. இதனாலே, முதியவர்கள் பலரும் இவர் தயாரிக்கும் உணவை விரும்பி சாப்பிடுகின்றனர். இவரிடம் 250க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தினமும் காலை, மதியம் என இரு வேளை உணவுகளை தயார் செய்து கொடுத்து வருகிறார். மற்றொரு சிறப்பு என்னவென்றால், சமைக்கும் உணவை, அவர்கள் வீட்டுக்கு சென்று 'டோர் டெலிவரி' செய்கின்றனர். டெலிவரி, உணவு என இரண்டுக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 120 முதல் 250 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கிறார்.
தற்போது, இவர் சிலிம்பி பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே உணவுகளை வழங்கி வருகிறார். காரணம், நீண்ட தொலைவு சென்று உணவை டெலிவரி செய்ய முடியாது என்பதே. உணவை டெலிவரி செய்யும் வேலைகளை அவரது குடும்பத்தினரே பார்த்து கொள்கின்றனர்.
லதாவின் வேலை சமைப்பது, அதை டிபன் பாக்சில் வைப்பது. அதுமட்டுமின்றி, ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்டோருக்கு சமைத்து கொடுத்தாலும், தன் வீட்டின் சமையலறையில் சமையல் செய்து அசத்துகிறார். சிறிய தீப்பொறியில் தான் காட்டுத்தீயே உருவாகும் என்பது போல, இவர் வீட்டில் உள்ள சிறிய சமையலறையில் தான் நுாற்றக்கணக்கானோருக்கு சுட சுட சாப்பாடு தயாராகிறது.
அதிகாலை முதல்
ஒரு குடும்ப பெண்ணாக இருந்து, தன் உழைப்பினால், தனது குடும்பத்தினை தலை நிமிர வைத்த லதாவின் வார்த்தைகள்:
வழக்கமாக அதிகாலை 3:00 மணிக்கு எழுந்திருப்பேன். சில சமயங்களில் காலை உணவாக, 'கடுபு' என்ற உணவை தயார் செய்ய வேண்டுமென இருந்தால், அதிகாலை 2:00 மணிக்கே எழுந்திருப்பேன்.
சமீபத்தில், எங்கள் வீட்டுப் பகுதியில் உள்ள 84 வயதான முதியவரின் மனைவி இறந்து விட்டார். அந்த முதியவர், ரஸ்க் மட்டுமே சாப்பிட்டு வந்தார். இதை அறிந்த நான், அவருக்கு ஒரு முறை சாப்பாடு செய்து கொடுத்தேன். அதை சாப்பிட்ட அவர், வீட்டு சாப்பாடு போலவே உள்ளது என தினமும் என்னிடம் சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறார்.
என்னுடைய சமையல் மங்களூரு கத்தோலிக்க உணவு பாணியில் இருக்கும். தினமும் காலை, மதியம் என இரண்டு வேளை உணவு செய்கிறேன். ஒரு சிலருக்கு மட்டும் இரவு செய்து கொடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 36,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களை பராமரிப்பது, உணவு தயாரித்து கொடுக்கும் சேவைகளை செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக மாவட்ட தொழில் மையத்தின் இணை இயக்குநர் கோகுல்தாஸ் நாயக் கூறினார்.
- நமது நிருபர் -