ADDED : ஜன 27, 2024 09:25 AM

குளிர்காலத்தில் பூனைகளை முறையாக பராமரிக்காவிட்டால் வைரஸ் தொற்று ஏற்படும் என, எச்சரிக்கிறார் கால்நடை டாக்டர் வேணுகோபால். தடுக்க என்ன செய்ய வேண்டும்...அதையும் அவரே விளக்குகிறார்:
குளிர்காலத்தில் மனிதர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல் இருக்கும். அதேபோல், குளிர்காலத்தில் பூனைகளுக்கும் வைரஸ் தொற்று அதிகம் இருக்கும். அதனால் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். குளிர் அதிகமாக இருக்கும் போது, அவற்றை வெதுவெதுப்பான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.
குளிர்காலத்தில், பூனைகளுக்கு உண்பதற்கு இறைச்சி, குறிப்பாக கோழி இறைச்சி மட்டும் கொடுத்தால் அவற்றின் உடல் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க முடியும். இந்த காலகட்டத்தில், பூனைக்கு சீப்பு வைத்து முறையாக சீவி விடவேண்டும். அப்படிச் செய்தால் முடி உதிர்வதைத் தடுக்க முடியும். குளிர்காலம் முடியும் வரை குளிக்க வைக்கத் தேவையில்லை.
வீட்டில் பராமரிக்கப்படும் பூனைகள், குளிர்காலத்தில், தன் துணையை தேடி வெளியில் செல்லும். வெளியில் ஆரோக்கியமற்ற சூழலில் வளரும் பூனைகளிடம் உள்ள நோய்த்தொற்று, வீட்டுப்பூனைகளுக்கும் ஏற்படும். அதைத்தடுக்க வேண்டுமெனில், பூனைகள் வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

