தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்

டாக்டரை கேளுங்கள்


PUBLISHED ON : அக் 13, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முத்துலட்சுமி, மதுரை: என் வயது 30. திருமணமாகி மூன்றாண்டுகளாகிறது. எனக்கு பி.சி.ஓ.எஸ்., இருப்பதாக டாக்டர் சொல்கிறார். இதனால் கர்ப்பமாவது தள்ளிப்போகுமா.

பி.சி.ஓ., எனப்படும் சினைப்பையில் உருவாகும் நீர்கட்டிகள் கர்ப்பம் தாமதமாவதற்கும் கருச்சிதைவுக்கும் ஒரு காரணமாக அமையலாம். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக கருமுட்டை தன்மை குறையும் அல்லது கருமுட்டை உருவாகாது. ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது கருமுட்டைகளை உற்பத்தி செய்ய இயலாத நிலையில் கருவுறுதல் மற்றும் கருச்சிதைவு ஏற்படலாம்.

பி.சி.ஓ., உள்ள பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பாகவே மகப்பேறு டாக்டரிடம் பரிசோதனை செய்வது நல்லது. ஏ.எம்.எச்., எல்.எஸ்.எச்., எப்.எஸ்.எச்., ஹார்மோன் பரிசோதனை செய்து மாற்றங்கள் இருந்தால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ரத்தசர்க்கரை அளவை சரிபார்ப்பது உடல் எடையில் பி.எம்.ஐ. அளவை சரிபார்த்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில் டாக்டர் அறிவுரைப்படி ரத்தப்பரிசோதனை, ஸ்கேன், ரத்தசர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். முறையான உணவு பழக்கவழக்கம் மற்றும் மருந்துகள் உட்கொள்வதன் மூலம் மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம். குறிப்பாக மனஅழுத்தம் தவிர்ப்பது அவசியம்.

-- டாக்டர் சிந்தியாகருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் மதுரை

கே.சண்முகம் வேடசந்துார்: ஆஸ்துமா பாதிப்பு பரம்பரை வழியாக உருவாகிறதா. அதற்கு தீர்வு தான் என்ன.

மூச்சுக்குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு மூச்சுக்காற்று சுலபமாக உள்ளே சென்று வர இயலாத சூழ்நிலையே ஆஸ்துமா. இந்த பாதிப்பு பெரும்பாலும் பரம்பரை ரீதியாக வருவதுண்டு. ஆஸ்துமா உள்ளவர்கள் தங்களது உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை நடைமுறைகளையும் அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். ஆஸ்துமா என்பது பெரியவர், சிறியவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்புதான். தொடர்ந்து இருமல், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் அடைதல், நுரையீரல் பகுதியில் இருந்து இருமல் சத்தம் வருதல் இதன் அறிகுறிகள். மழைக்காலங்களில் இதன் தாக்கம் கூடுதலாக இருக்கும். இளம்சூடான கீரை வகைகள், வெஜ் சூப், ஆட்டுக்கால் சூப் ஓரளவு அலர்ஜியை கட்டுக்குள் வைத்திருக்கும். முக்கியமாக ஆஸ்துமா உள்ளவர்கள் வயிறு நிறைய உணவு உண்ணுதல் கூடாது. கூடுதல் உணவு உண்டால் நுரையீரலுக்கு அழுத்தம் கொடுத்து மூச்சு திணறல் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆஸ்துமா உள்ளவர்கள் இரவு 7 :00 மணிக்குள் உணவு உண்ணுதல் அவசியம்.

-- டாக்டர் .கே.எஸ்.மதுபிரியா பொது மருத்துவம் குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர்வேடசந்துார்

பி.மங்களேஸ்வரன்ராமநாதபுரம்:சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது. அடிக்கடி அடி வயிற்று பகுதியில் வலி உள்ளது. இதற்கான தீர்வு என்ன.

சிறுநீரகப் பாதையில் கல் இருந்தால் இது போன்ற அறிகுறிகள் தெரியும். சிறுநீரகத்தில் கல் அளவைப்பொறுத்து நீர் வெளியேறும் போது எரிச்சல், கடுப்பு, ரத்தம் வெளியேறுல் ஏற்படும். சிறுநீரகத்தில் உப்பு படிதலின் காரணமாக கற்கள் உருவாகின்றன.

ஒரு நாளைக்கு குறையாமல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் அருந்துவது குறையும். அப்போதும் இதுபோன்று தண்ணீர் குடிக்க வேண்டும்.

உணவில் பீன்ஸ் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக பாதிப்பு குறையும். சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்கள் உப்பு, அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்களில் உள்ள ஆக்சிலேட் வேதிப்பொருள் சிறுநீரக கல் உண்டாக காரணமாகிறது. சாக்லெட், கீரை வகைகள், காலிபிளவர், காளான், சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கல்லின் அளவைப் பொறுத்து அலோபதி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

கல் பெரிய அளவில் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். பொங்கல் பூ அல்லது நெருஞ்சி முள் கஷாயம் சாப்பிட்டால் சிறுநீரக கல்லை குறைக்கும். இதனை சித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

-டாக்டர் ஜி.புகழேந்தி, சித்த மருத்துவர்

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்


எஸ்.சந்தோஷ், சிவகங்கை:குழந்தைகளுக்கு சொறி சிரங்கு எதனால் வருகிறது. எவ்வாறு சரிசெய்வது.

பொதுவாக தோல் நோயான சிரங்கு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடிய ஒரு வகையான தொற்று. நோயுள்ளவர்களை தொடுவதாலும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதாலும் வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளுக்குதான் இது எளிதில் பரவி தொற்று உண்டாகும். விரல்கள் இடையிலும், மார்பிலும், தொப்புள் பகுதியிலும், பிறப்புறுப்பிலும் அரிப்பு ஏற்பட்டு புண் உண்டாகும். அரிப்பு வந்தால் தோல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை, களிம்புகளை உபயோகித்தால் நோய் முற்றி பக்க விளைவு வரும்.

அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவரின் சோப்பு, துண்டு, ஆடைகளை குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. வெளியே சென்று வீடு திரும்பியவுடன் குளிக்க வேண்டும்.

- டாக்டர் தீப்தி, உதவி பேராசிரியர், தோல் மருத்துவத் துறை, மருத்துவக் கல்லுாரி, சிவகங்கை



பா.நாகேஸ்வரன்அருப்புக்கோட்டை: எனது குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் வந்துள்ளது. இந்நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன


டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுவால் வருகிறது. தண்ணீர், காற்று இவற்றால் வராது. சுத்தமான தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஏடிஸ் புழு உற்பத்தியாகி கொசுவாக மாறுகிறது. காய்ச்சல் வந்தால் உடம்பில் எலும்பு முறிவு ஏற்பட்டால் எவ்வாறு வலிக்குமோ அந்த அளவிற்கு உடலில் வலி இருக்கும். காய்ச்சல் வந்தால் ரத்த தட்டுக்கள் அளவு குறையும். காய்ச்சல் வந்த உடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி எதுவும் கிடையாது. உடலில் நீர்ச்சத்து குறைவதால் தண்ணீர், மோர், இளநீர், பழச்சாறுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து குறையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை பகல் நேரத்தில் கூட கொசுவலை கட்டி தான் துாங்க வைக்க வேண்டும். நிலவேம்பு கஷாயம் எடுத்துக் கொள்ளலாம். உரிய பாதுகாப்புடன் கொசு கடிக்காமல் பாதுகாத்துக் கொண்டால் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்கலாம்.

- டாக்டர் கோமதிநகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அருப்புக் கோட்டை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us