Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : ஆக 31, 2025

Follow on Google

PUBLISHED ON : ஆக 31, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.கீர்த்திகா ஸ்ரீ, போடி: சூடான காபி, டீ அல்லது குளிர் பானம் குடிக்கும் போது பல் கூச்சம் ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு கூறுங்கள்?

பல் தேய்மானம் ஏற்பட்டால் பல் கூச்சம் ஏற்படும். பல் துலக்கும் போது பிரஷால் அழுத்தி தேய்ப்பதாலும், தரமற்ற பிரஷ்களால் துலக்குவதாலும் பல் தேய்மானம் ஏற்படுகிறது. நொறுக்கு தீனி நிறைய சாப்பிட்டால், பல் எனாமல் தேய்ந்து போகும். பல் சொத்தை இருந்தாலும் கூச்சம் ஏற்படும். பல் கூச்சத்தை சரி செய்ய பேஸ்ட் உள்ளது. மிகவும் தேய்மானம் ஏற்பட்டால் கவர் போட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு பல் முளைத்த பிறகு பல் துலக்க பழக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று நிமிடம் துலக்கினால் போதும். வெறும் கையால் துலக்குவதை விட பிரஷால் துலக்கினால் பல் இடுக்குகளை சுத்தம் செய்ய முடியும். காலை, இரவு பல் துலக்க வேண்டும். சாப்பிட்ட உணவு பல் இடுக்கு, ஈறுகளில் சிக்கி இருந்தால் துர்நாற்றம் ஏற்படும். இதை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

- டாக்டர் கே.கவிதா, பல் மருத்துவ நிபுணர், அரசு மருத்துவமனை, போடி.



பி.கற்பகச்செல்வி, ராமநாதபுரம்: எனக்கு 40 வயதாகிறது. கூர்ந்து கவனித்தால் பூச்சி பறப்பது போன்று உள்ளது. கண்ணை சுற்றி கருவளையம் உள்ளது. இதற்கு என்ன காரணம். எப்படி சரியாகும்?


சரியான துாக்கமின்மை, நீண்ட நேரம் அலைபேசி, கம்ப்யூட்டர் பார்ப்பது, போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது. உடலில் உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் கண்களை சுற்றி கருவளையம் வருகிறது. 'ஏசி'யில் பணிபுரிவதால் தாகம் எடுப்பது இல்லை. குடிநீரை போதுமான அளவு குடிப்பது இல்லை. இதுபோன்ற காரணங்களால் கண்ணை சுற்றி கருவளையம், இரவில் துாங்கி விழிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படும்.

இதனை தவிர்க்க கம்ப்யூட்டர், அலைபேசியில் பணிபுரியும் போது அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளியில் கண்ணிற்கு ஓய்வு அளிக்க வேண்டும். அப்போது சிறிதுதுாரத்தில் உள்ளவற்றை பார்க்க வேண்டும். உணவை பொறுத்தமட்டில் காய்கறி பழங்களை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். பூச்சி பறப்பது போல தோன்றுவது விழித்திரையில் பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது.

இது சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் காரணமாக நரம்பு குழாய் பாதிப்பால் வரலாம். வயது சார்ந்த விழித்திரை கோள் சிதைவாக கூட இருக்கலாம். பாதிப்பு எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்கலாம்.

பாதிப்பு அதிகரித்து இருந்தால் லேசர் சிகிச்சை அளிக்கலாம். குறைவாக இருந்தால் பிரஷர், சுகரை குறைத்து ஊசி மூலமும் சிகிச்சை பெறலாம். இது லென்ஸ்க்கு பின்னால் உள்ள பிரச்னை என்பதால் கண்ணாடி அணிவது தீர்வு ஆகாது.

- டாக்டர் எஸ்.சுபாசங்கரி, உதவி பேராசிரியர், கண்சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்



ஆ.சண்முகசுந்தரம், சிவகங்கை: காது, மூக்கு, தொண்டையை எப்படி பராமரிப்பது?

மனித உடலில் காது மூக்கு தொண்டை மிகவும் முக்கிய பகுதி. இவை சுலபமாக சுற்றுப்புற சூழல் காரணமாக நோய் தொற்றால் பாதிப்படைய வாய்ப்புள்ளது. சுகாதாரமற்ற உணவுகளை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். காது மூக்கு தொண்டை பகுதியில் ஏதாவது தவறுதலாக சிறு பொருட்கள் உள்ளே சென்று விட்டால் அதை வீட்டில் எடுக்க முயற்சிக்க வேண்டாம். டாக்டரின் ஆலோசனைப்படி தான் எடுக்க வேண்டும்.

டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதில் சொட்டு மருந்து ஊற்றுவதை தவிர்க்க வேண்டும் தேவையில்லாமல் காதில் பஞ்சு வைத்தோ அல்லது குச்சி வைத்தோ சுத்தம் செய்ய வேண்டாம். அதேபோல் காதில் அதிகமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹெட்போன் பயன்படுத்த வேண்டாம். தொண்டையில் வலி ஏற்பட்டாலோ புண் இருந்தால் வீட்டு வைத்தியம் சுய வைத்தியம் செய்யாமல் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும்.

அதிகமான கூட்ட நெரிசலில் செல்லும் போதும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும். கை கால்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒரு முறைக்கு இருமுறை காலை மாலையில் குளிப்பதோடு நம் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

- டாக்டர் மணிமொழி, காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், அரசு மருத்துவமனை, பலவாங்குடி



சுந்தரி, சாத்துார்: எனது மகளுக்கு 16 வயது ஆகிறது. அடிக்கடி வயிற்று போக்கு ஏற்பட்டு அவதிப்படுகிறாள். தவிர்க்கும் முறைகள் மற்றும் சிகிச்சைகள் என்ன?

நன்கு காய்ச்சிய நீரை மட்டுமே குடிக்க வேண்டும். கழிவறைக்கு சென்று வந்தபின் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஈ மொய்க்கும் திண்பண்டங்களை தவிர்க்க வேண்டும். வீட்டில் உணவில் ஈ மொய்க்காமல் இருக்க உணவு பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வயிற்றுப்போக்கு சமயத்தில் ஓ.ஆர்.எஸ் எனும் உப்பு மற்றும் சர்க்கரை கரைசலை நீரில் கலந்து அடிக்கடி பருக கொடுக்க வேண்டும். சோர்வாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். லோப்ரமைடு மாத்திரையை மருத்துவரின் அனுமதியின்றி உண்ணக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து கடைகளில் மருந்து வாங்கி உண்பது தவறு.

- டாக்டர் முனிசாமி கேசவன், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, சாத்துார்

சபரீசன், மதுரை: வாயுவைக் கட்டுப்படுத்த என்ன வழி டாக்டர்?

கிழங்கு, பயறுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆவியில் அவித்த உணவை அதிகம் சாப்பிடுங்கள். வறுத்தது, பொரித்தது, பாஸ்ட் புட், பாக்கெட் புட், ஸ்நாக்ஸ் அடிக்கடி வேண்டாம். பாட்டில் பானங்களை மறந்துவிடுங்கள். அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, புகையிலை, மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். டாக்டரிடம் கேட்காமல் அல்சருக்கும், பேதிக்கும் மாத்திரை, மருந்து சாப்பிடாதீர்கள். வாயுவை வரவேற்கும் மொச்சை, பட்டாணி, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிபிளவர், முந்திரி, வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், சிப்ஸ், நுாடுல்ஸ், செயற்கைப் பழச்சாறு, மென்பானம், மசாலா நிறைந்த பாக்கெட் உணவு, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட உணவு, வினிகர் தவிர்த்து விடுங்கள். எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.

- டாக்டர் கு. கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap