தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/ தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்


PUBLISHED ON : ஜூலை 06, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 06, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம பக்தர்களை காயப்படுத்திய அயோத்தி கோவில் முறைகேடு!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரமாண்ட ராமர் கோவிலை, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த கோவில் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கை மற்றும் பெறப்படும் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் எழுந்த புகாரை அடுத்து, எஸ்.ஐ.டி., எனப்படும் , சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலர் சம்பத் ராயின் ஓட்டுநர் ராமசங்கர் யாதவ் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய் துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரிய அளவில் முறைகேடு நடந் திருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கடந்த ஐந்து ஆண்டு கால கணக்குகளை மறுதணிக்கை செய்ய வும், எஸ்.ஐ.டி., முடிவு செய்துள்ளது.

சங் பரிவாரங்களின் விருப்பப்படியும், உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் வெளியான தீர்ப்பின் அடிப்படையிலும் தான், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. அதுமட்டுமின்றி, பாரதிய ஜனதா கட்சியை மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு கொண்டு வருவதில், ராமஜென்மபூமி இயக்கம் ஒரு தீர்க்கமான பங்கை ஆற்றியது.

பா.ஜ.,வின் வளர்ச்சி மற்றும் தேர்தல் வெற்றிகளுக்கு ராமர் கோவில் விவகாரம் முக்கிய பங்காற்றியுள்ளது என்று சொன்னால் யாரும் மறுப்பதற்கு இல்லை.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல ஹிந்து தலைவர்கள், இக்கோவிலின் கட்டுமான பணியை, தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த செயலாகவே முன்னிறுத்தி வந்தனர். இக்கோவில் வெறும் மத வழிபாட்டு தலமாக மட்டுமின்றி, தேசிய பெருமையின் அடையாளமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, நிதி முறைகேடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்த குற்றச்சாட்டுகள், கோவில் நிர்வாகத்தின் நற்பெயருக்கு மட்டுமல்லாமல், அதனுடன் அரசியல் ரீதியாக தொடர்புடை தலைவர்களுக்கும், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

அதேநேரத்தில், இக்கோவில் தொடர்பான முறைகேடுகள், ராம பக்தர்களையும், கோவில் கட்டும் திட்டத்தை நனவாக்க பல ஆண்டுகளாக உழைத்தவர்களையும் காயப்படுத்தியுள்ளது என்றும் கூறலாம். கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகள், செலுத்தும் காணிக்கைகள், அதன் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்ய, மத்திய, மாநில பா.ஜ., அரசுகள் தவறி விட்டன என்பதே நிதர்சனம்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக, மக்களின் உணர்வுகளை துாண்டி விடுவதில், பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும் வெற்றி பெற்றன. அதன்பின், கட்டப்பட்ட கோவிலில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதில் போதிய அக்கறை காட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதற்கிடையில், 'இந்த நன்கொடை மற்றும் காணிக்கை முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதில்லை. அதை மீறி யாராவது வாதிட முன்வந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, வழக்கறிஞர்கள் சங்கம் ஒன்று எச்சரித்திருப்பது பாராட்டத்தக்கது.

உத்தர பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அப்படிப்பட்ட சூழலில், இந்த நன்கொடை முறைகேடு சர்ச்சை, உ.பி., மாநிலத்தை ஆளும் பா.ஜ., கட்சிக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், முறைகேடு தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவது அவசியம். அத்துடன் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகளிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதுவே, ராம பக்தர்களின் நெஞ்சில் பால் வார்க்கும் செயலாகும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us