Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/விருந்தினர் பகுதி/கண்மணி ராசாவின் 'பெயரெழுதிய' அரிசி

கண்மணி ராசாவின் 'பெயரெழுதிய' அரிசி

கண்மணி ராசாவின் 'பெயரெழுதிய' அரிசி


ADDED : ஜூன் 30, 2024 12:04 PM

Follow on Google

ADDED : ஜூன் 30, 2024 12:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் கண்மணி ராசா. மில் தொழிலாளியாக இருந்து 'கவிதையாவது கழுதையாவது', 'லட்சுமிக்குட்டி', 'என் பெயரெழுதிய அரிசி' ஆகிய கவிதை புத்தகங்களை எழுதி உள்ளார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில துணை தலைவராகவும், ஹிந்த் மஸ்துார் சபா (எச்.எம்.எஸ்.,) தொழிற்சங்கத்தின் தொழிலாளர் கல்வி ஆசிரியராகவும் உள்ளார். வனத்தின் முக்கியத்துவம், பாரம்பரிய விளையாட்டுகளை இழந்த குழந்தைகளை மீட்டெடுப்பது குறித்தும் பள்ளிகளில் பேசி வருகிறார்.

சாமானியர்களின் குரலை எழுத்தாக்கும் இவர் கூறியதாவது: எனது இயற்பெயர் அய்யனார் செல்வம். தென்காசி மாவட்டம் சிவகிரி எனது பூர்வீகம். வாழ்வாதாரத்திற்காக ராஜபாளையம் வந்தனர் என் பெற்றோர். நான் பிறந்தது ராஜபாளையம்.

என் தமிழ் ஆர்வத்தை பார்த்து பள்ளிகளில் பேசுவதற்கு ஆசிரியர்கள் என்னை அழைப்பர். இதற்காக புத்தகம் படிக்க துவங்கியதில் கவிதை எழுதும் ஆர்வம் துளிர்விட்டது. குடும்பச்சூழல் காரணமாக பிளஸ் 2 முடித்ததும் திருமணம். சிறு வயதிலே வாழ்க்கை பக்கம் வந்துவிட்டேன். அதில் கிடைத்த அனுபவங்கள் மேலும் என்னை கவிதைகள் எழுத வைத்தது.

மில் வேலை தவிர ஓய்வு நேரங்களில் அனுபவங்களை எழுத துவங்கினேன். நுாலகம், புத்தக வாசிப்பை பற்றிக்கொண்டேன். வாசிப்பு அதிகரிக்க இலக்கிய ரசனை மிகுந்தது. தொழிலாளர், உழைக்கும் மக்கள் சார்ந்த கவிதைகள் எழுத துவங்கினேன்.

2008ல் முதல் கவிதை தொகுப்பு 'கவிதையாவது கழுதையாவது' வெளியானது. நான் பஞ்சாலை தொழிலாளி, மனைவி தீப்பெட்டி ஆலை தொழிலாளி. பகலில் வேலை செய்து அலுத்து இரவில் கவிதை குறித்து பேச நினைப்போம், ஆனால் களைப்பில் உறங்கி விடுவோம். அந்த சூழலில் தான் 'கவிதையாவது கழுதையாவது' என்ற மையக்கருவை கொண்டு புத்தகம் எழுதினேன். இந்த தலைப்பு பரவலாக பேசப்பட்டது. முதலில் எதிர்த்தவர்கள் கூட புத்தகத்தை வாசித்த பின் ஏற்று கொண்டனர். பின்னர் கலை இலக்கிய அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டது. என் எழுத்து அதிகமாக படிக்கப்பட்டது.

எனது இரண்டாவது புத்தகம் 'லட்சுமிக்குட்டி'. எனக்கு பெண்பிள்ளை கிடையாது. இரண்டுமே ஆண் பிள்ளைகள். மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது. பெண் பிள்ளை இல்லாத ஏக்கத்தை லட்சுமிக்குட்டி என்ற கற்பனை கதாபாத்திரத்தை கொண்டு கவிதை தொகுப்பாக எழுதினேன். அந்த தொகுப்பில் எல்லா கவிதைகளும் பாராட்டை பெற்றன.

எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு

புது வீடு நோக்கி புறப்பட்டது

வண்டி. சுவரில் அவள்வரைந்திருந்த

வார்த்தையையும் ஏற்றக்கூறி

அழத்தொடங்கினாள் லட்சுமிக்குட்டி.”

மணிகண்டன் வீட்டுக்கு மணீஸ் இல்லம்.

ஐஸ்வர்யா வீட்டுக்கு ஐஸ் ஹவுஸ்.

சீனிவாசன் வீட்டுக்கு ஸ்ரீ நிவாஸ்.

நம்ம வீட்டுக்கு ஏம்பா என் பெயரில்லை

என கேட்கிறாள் லட்சுமிக்குட்டி.

அடுத்த முறை வீடு தேடும் போது அவள் பெயருள்ள வீடாக தேட வேண்டும் போன்ற கவிதைகள் வாசகர்களை கவர்ந்தது.

கம்பம் பாரதி இலக்கிய பேரவை லட்சுமிக்குட்டி நுாலை சிறந்த நுாலாக தேர்வு செய்து பாராட்டினர். பிறகு ஜாதிரீதியான பாரபட்சங்களையும் எழுதினேன். அந்த காலகட்டத்தில் வெளியான 'வலி' என்ற என்னுடைய கவிதை 2016ல் சிற்றிதழ்களில் சிறந்த கவிதையாக தேர்வானது. நிறைய மொழிகளில் பெயர்க்கப்பட்டது. 2023ல் 'என் பெயரெழுதிய அரிசி' கவிதை தொகுப்பு வெளியானது. இதில் மெல்ல குறைந்து வரும் குலதெய்வ வழிபாடு பற்றியும், குழந்தைகள் மறந்து போன பாரம்பரிய விளையாட்டு பற்றியும் எழுதியுள்ளேன். வட்டார வழக்காடல் நிறைய இருப்பதால் என் கவிதைகள் நிறைய பேரை சென்றடைந்துள்ளது.

'என் பெயரெழுதிய அரிசி' கவிதை தொகுப்பு புதுக்கோட்டை தமிழ்ச்சங்க விருது வென்றுள்ளது.

நாம் விளையாடியது போல் இப்போதுள்ள குழந்தைகள் விளையாடுவதில்லை. இந்த சமூக சிக்கல் பற்றியும் எழுதுகிறேன். மலையிலே தீப்பிடிக்குது பிள்ளைங்களா ஓடி வாங்க என பாடல் பாடுவோம். அப்போது பிள்ளைகள் வெளியே ஓடி வருவர். மலையை பாதுகாப்பது நம் கடமை என முன்னோர்கள் பாடல்கள் வைத்துள்ளனர். நாம் இழந்தது விளையாட்டை மட்டுமல்ல. நம் முன்னோர்கள் நமக்கு கடத்திய நற்பண்பு, ஒற்றுமை உணர்வையும் இழந்து விட்டோம்.

இளைஞர்கள் எவ்வளவு சிரமம் இருந்தாலும் வாசிக்க வேண்டும். சமகால புத்தகங்களை வாசிக்க வேண்டும். எந்த துறையில் எழுத உள்ளோமோ அதில் சிறப்பாக உள்ள எழுத்தாளரை பின்பற்ற வேண்டும். புதிய அனுபவங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இவரை பாராட்ட 89035 43802

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap