sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அமாவாசை பெருமாள் கோவில்

/

அமாவாசை பெருமாள் கோவில்

அமாவாசை பெருமாள் கோவில்

அமாவாசை பெருமாள் கோவில்


ADDED : செப் 23, 2016 10:46 AM

Google News

ADDED : செப் 23, 2016 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாகாளய அமாவாசையன்று தீர்த்த தலங்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால், அவர்களது ஆசிர்வாதம் கிடைக்கும். இந்நாளில் தீர்த்தக்கரையில் பள்ளி கொண்ட திருவள்ளூர் வீரராகவப்பெருமாளை சிறப்பு தரிசனம் செய்வோம்.

தல வரலாறு: புருபுண்ணியர் என்ற முனிவர், புத்திர பாக்கியத்திற்காக மகாவிஷ்ணுவை வேண்டி சாலியக்ஞம் (யாகம்) நடத்தினார். இதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு யாகத்தின் பெயரால், 'சாலிகோத்ரர்' என்று பெயர் சூட்டினார்.

சாலிகோத்ரர் பெருமாள் பக்தராக விளங்கினார். இங்குள்ள தீர்த்தக்கரையில் பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். சுவாமிக்கு தினைமாவு படைத்து, யாராவது ஒருவருக்கு கொடுத்தபின்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருசமயம் பூஜையின்போது வந்த முதியவருக்கு சாப்பிட தினை மாவு கொடுத்தார். சாப்பிட்டவர் தனக்கு மேலும் பசிப்பதாகச் சொல்லவே, தான் சாப்பிட வைத்திருந்த மாவையும் கொடுத்தார். தனக்கு களைப்பாக இருப்பதாகச் சொன்ன முதியவர், அப்படியே சயனத்தில் ஆழ்ந்து மகாவிஷ்ணுவாக ரூபம் காட்டியருளினார். அந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது.

விமான தரிசனம்: மகரிஷிகள் சிலர் இங்கு யாகம் நடத்தினர். அப்போது அசுரர்கள் யாகத்தை நடத்த விடாமல் தொந்தரவு செய்தனர். ரிஷிகள் மகாவிஷ்ணுவை வேண்டவே, அவர் அசுரர்களை வென்று, யாகம் தொடர்ந்து நடக்க அருளினார். இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் 'விஜயகோடி விமானம்' அமைக்கப்பட்டது. இந்த விமானத்தை தரிசனம் செய்தால் அனைத்துச் செயல்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

பாவம் போக்கும் தீர்த்தம்: கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும். இங்குள்ள தீர்த்தத்தை நினைத்தாலே, பாவங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம். இதனால் 'ஹ்ருத்தாபநாஸினி' என்று இத்தீர்த்தத்திற்கு பெயர் உள்ளது. மனதில் எண்ணும் பாவங்களைக் கூட இந்த தீர்த்தத்தை நினைத்தால் அது மன்னிக்கப்பட்டு விடும். ஒன்பது கரைகளுடன் அமைந்த மிகப்பெரிய தீர்த்தம் இது.

அமாவாசை வழிபாடு: சாலிகோத்ர மகரிஷிக்கு, மகாவிஷ்ணு தை அமாவாசையன்று காட்சி கொடுத்தார். இதனால் இத்தலம் அமாவாசை வழிபாட்டிற்குரியதாகத் திகழ்கிறது. அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். பிதுர்கள் நம்மைத் தேடி வரும் புரட்டாசி மகாளய அமாவாசையன்று இங்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது விசேஷ பலன் தரும். அமாவாசையன்று தினைமாவு பிரசாதம் தருகின்றனர். இத்தலத்தில் வசித்த பேசும்

திறனற்ற ஒருவர், அமாவாசை தோறும் இந்த தீர்த்தத்தில் நீராடி வந்தார். வாழ்நாள் முழுவதும் பேச முடியாத இவர், தனது அந்திமக்காலத்தில் 'பப்புளி துப்பட்டியுடன் பெருமாள் வந்து என்னை அழைத்துக்கொண்டு போகிறார்' என இரண்டு முறை சொல்லிவிட்டு உயிரை விட்டார். தன்னை வழிபட்டவர்களுக்கு அந்திமக்காலத்திற்கு பின்பு துணை வருபவராக இத்தல பெருமாள் அருளுகிறார். நவராத்திரி நாட்களில் சுவாமியும், தாயாரும் கண்ணாடி அறையில் சேர்த்தியாகக் காட்சி தருவர்.

பூமிக்கு வந்த தாயார்: இங்கு அருளும் கனகவல்லித்தாயார், இப்பகுதியை ஆண்ட தர்மசேனன் என்ற மகாராஜாவின் மகளாக அவனே அறியாமல் பிறந்தாள். அவள் திருமணப்பருவம் அடைந்தபோது தன் மகளுக்கு நல்ல வரன் அமைய, மன்னன் சுவாமியை வேண்டினான். சுவாமியே இளைஞனாக வந்து, கனகவல்லியை மணம் முடித்துத் தரும்படி கேட்டார். கனகவல்லிக்கும் அந்த இளைஞனைப் பிடித்துப்போகவே, அவருக்கு தன் மகளை மணம் முடித்துக் கொடுத்தார். பின் இருவரும் சுவாமி சன்னிதிக்குள் சென்று மறைந்தனர். தன்னிடம் மகளாக வளர்ந்தது 'தாயார்' என்பதை அறிந்த மன்னன் பரவசப்பட்டான். பின்னர், தாயாருக்கு தனிசன்னிதி கட்டப்பட்டது. வசுமதி என்றும் இவளுக்குப் பெயருண்டு.

மன்னன் வசித்ததாகக் கருதப்படும் ஈக்காடு என்னுமிடத்திலும் தாயாருக்கு சன்னிதி இருக்கிறது.

வயிற்று வலி தீர்க்கும் பாட்டு: திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் வேதாந்த தேசிகனால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. வள்ளலாரும் சுவாமியை பாடியுள்ளார். ஒருசமயம் வள்ளலாருக்கு தீராத வயிற்று வலி உண்டானது. இங்கு வந்து சுவாமியை வணங்க வலி நீங்கியது. மகிழ்ந்த வள்ளலார் சுவாமியை போற்றி பஞ்சகம் பாடினார். வயிறு உபாதை உள்ளவர்கள் நிவாரணம் பெற இதைப் பாடுகின்றனர்.

திருவள்ளூர் பெயர்க்காரணம்: இத்தலத்திற்கு வந்த திருமங்கையாழ்வார் சுவாமியை மங்களாசாசனம் செய்தபோது, ராவணனை சம்ஹாரம் செய்த ராமன், இங்கு பள்ளி கொண்டிருப்பதாக பாசுரம் பாடினார். இதனால் சுவாமிக்கு, 'வீரராகவர்' (அசுரர்களை வென்றதால் வீரர், ராகவர் என்றால் ராமன்) என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். 'எவ்வுள் கிடந்தான்' என்றும் பெயருண்டு. சுவாமி, முதியவராக வந்தபோது மகரிஷியிடம், “தான் எங்கே படுப்பது?” என்ற அர்த்தத்தில் 'எவ்வுள்?' என்று ஒரே வார்த்தையில் கேட்டார். இதனால் சுவாமிக்கு இந்த திருநாமமே அமைந்து விட்டது.

தலமும் 'திருஎவ்வுளூர்' எனப் பெயர் பெற்று, திருவள்ளூராக திரிந்தது.

வீரராகவப்பெருமாள் ஆதிசேஷன் மீது தெற்கே தலை வைத்து புஜங்க சயனக்கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். இவர் முதியவராக தனியே வந்தவர் என்பதால், அருகில் தாயார்கள் கிடையாது. மார்பில் மகாலட்சுமி, நாபியில் பிரம்மா இருக்கின்றனர். தீராத நோய்களை தீர்த்து வைப்பவர் என்பதால் 'வைத்திய வீரராகவப்பெருமாள்' என்றும் அழைக்கின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீர்த்தத்தில் பால், வெல்லம் கரைத்து வழிபடுகிறார்கள். நோய் குணமானதும் உருவ காணிக்கை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இருப்பிடம்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ., பேருந்து நிலையம் அருகில்.

நேரம்: காலை 6:30 - 12:00, மாலை 4:00 - இரவு 8:00 மணி, அமாவாசை நாட்களில் காலை 5:00 - இரவு 8:30மணி.

அலை/தொலைபேசி: 97894 19330; 044 - 2766 0378.






      Dinamalar
      Follow us