ADDED : செப் 23, 2024 09:25 AM
செவ்வாய் தோஷம் தீர திருநெல்வேலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் அரிசியை பரப்பி அதன் மீது தேங்காய் முடியில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர். இதை நீராஞ்சன தீபம் என்கின்றனர்.
அசுரன் இரண்யனின் மகன் பிரகலாதன். இவன் கருவில் இருக்கும் போதே விஷ்ணு பக்தன் ஆனான். இதனால் மகனை வெறுத்த இரண்யன் அவனைக் கொல்லத் துணிந்தான். பக்தனைக் காக்க முடிவெடுத்தார் மகாவிஷ்ணு. ஆனால் மனிதர், மிருகம், பிற சக்திகளால் தனக்கு அழிவு நேரக் கூடாது என வரம் பெற்றிருந்தான் இரண்யன். எனவே சிங்க முகமும், மனித உடலும் கொண்டு நரசிம்மராக தோன்றி நகத்தால் உடலைப் பிளந்து கொன்றார். மகாவிஷ்ணுவின் உக்கிரத்தை தாங்க முடியாமல் அனைவரும் பயந்தனர். சுவாமியின் மடியில் மகாலட்சுமி அமர்ந்த பின்னரே அவரின் கோபம் தணிந்தது. இந்த கோலத்தில் அவருக்கு 'லட்சுமி நரசிம்மர்' எனப் பெயர் வந்தது.
எட்டாம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் இக்கோயிலைக் கட்டினர். இங்கு சுவாமியின் தோளில் கை வைத்தும், அவரைப் பார்த்தபடியும் மகாலட்சுமி இருக்கிறாள். நரசிம்மர் கோயில் என்றாலும் சுவாமிக்கு சிங்கமுகம் இல்லை. சாந்தமாக மனித முகத்துடன் இருப்பதால் 'பிரகலாத வரதன்' எனப்படுகிறார். கடன், வழக்கு, நிலப்பிரச்னை தீரவும், வியாபாரம் பெருகவும் சுவாதி நட்சத்திரத்தன்று பானகம் நைவேத்யம் செய்கின்றனர்.
எப்படி செல்வது: திருநெல்வேலி டவுன் மேலமாடவீதியில் உள்ளது.
விசேஷ நாள் : புரட்டாசி சனி, நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 8:00 - 10:30 மணி; மாலை 5:30 - 8:00 மணி
தொடர்புக்கு: 98940 20443, 95859 58594
அருகிலுள்ள கோயில் : திருநெல்வேலி நெல்லையப்பர் (தம்பதி ஒற்றுமை)
நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி ; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 0462 - 233 9910