ADDED : செப் 20, 2024 10:25 AM

மகாராஷ்டிரா மாநிலம் ஷிர்டியில் இருந்து 60 கி.மீ., துாரத்தில் உள்ளது சிக்னாபூர். இங்கு சனி பகவான் கோயில் உள்ளது.
இக்கோயில் 300 ஆண்டுகளுக்கு முன் உருவானது. இங்குள்ள வீடுகள், வங்கிகள், காவல் நிலையம், கடைகள் என எங்கும் கதவுகள் கிடையாது. ஊரைக் காவல் காக்கும் பொறுப்பு சனீஸ்வரரைச் சேரும். அவரை மீறி யாராவது திருட்டில் ஈடுபட்டால் பார்வையை இழக்க நேரிடும். வெளியூர் செல்பவர் கூட வீட்டை திறந்தபடியே விட்டுவிடுவர்.
இங்குள்ள பொருட்கள் யாவும் சனீஸ்வரருக்கு உரிமையானது. கதவுக்கு பதிலாக திரைச்சீலையை பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள பனாஸ்னாலா ஆற்றில் ஒருமுறை வெள்ளம் ஏற்பட்டது. அதில் ஐந்தடி உயர கருங்கல் ஒன்று கரை ஒதுங்கியது. அதை நகர்த்த முயன்ற போது ரத்தம் பீறிட்டது. அன்றிரவு ஊர் தலைவரின் கனவில் சனீஸ்வரர் தோன்றி, ''நான் இந்த ஊரில் நிரந்தரமாக குடியிருக்க விரும்புகிறேன். சுயம்பு மூர்த்தியான எனக்கு மேற்கூரை இல்லாமல் கோயில் எழுப்புங்கள்'' எனக் கட்டளையிட்டார். அதன்படியே கோயில் எழுப்பப்பட்டது.
தாரா பாத்திரத்தில் உள்ள எண்ணெய் சுவாமியின் மீது வழிந்து கொண்டிருக்கும். வைகாசி தேய்பிறை சதுர்த்தசி, அமாவாசை நாட்களில் சனிபகவானின் நிறம் நீலமாக மாறுகிறது. நீலநிற மலர்கள்,
எருக்கு இலைகளை மாலையாக கோர்த்து சுவாமிக்கு அணிவிக்கின்றனர். வெள்ளியால் ஆன முகக் கவசம், ஆபரணங்களால் அலங்காரம் செய்கின்றனர். சிலையின் அருகில் கதாயுதம் உள்ளது. வைகாசி அமாவாசை சனிபகவான் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.
கோயில் கிணற்றில் நீராடியதும் ஈர ஆடையுடன் பக்தர்கள் எண்ணெய், பால் அபிஷேகம் செய்கின்றனர். அபிேஷக தீர்த்தம், பால் சாப்பிட்டால் விஷக்கடி குணமாகும்.
எப்படி செல்வது
மும்பையில் இருந்து 350 கி.மீ.,
அகமத் நகரில் இருந்து 35 கி.மீ.,
புனேவில் இருந்து 160 கி.மீ.,
விசேஷ நாள்: சனிக்கிழமை, அமாவாசை, சனிபகவான் ஜயந்தி.
நேரம்: 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
தொடர்புக்கு: 02427 --- 238 110
அருகிலுள்ள கோயில் : ஷீரடி சாய்பாபா 70 கி.மீ., (நிம்மதிக்கு...)
நேரம்: அதிகாலை 4:00 - இரவு 10:00 மணி; தொடர்புக்கு
02423 - 258 956, 258 963