/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சபரிமலை பக்தர்களே! இங்கேயும் போய் வரலாமே!
/
சபரிமலை பக்தர்களே! இங்கேயும் போய் வரலாமே!
ADDED : நவ 13, 2016 12:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கேரளத்தில் உள்ள மற்ற ஐயப்பன் கோவில்களுக்கும் சென்று வர வசதியாக தகவல்கள் தரப்பட்டுள்ளது
ஆரியங்காவு
ஆரியங்காவில் புஷ்கலாசமேத ஐயப்பன் காட்சி தருகிறார். சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், இங்கே குடும்பஸ்தராக காட்சி தருவது சிறப்பு. டிசம்பர் மாதம் மண்டல பூஜை காலத்தில், இங்கே ஐயப்பனுக்கும், மதுரை சவுராஷ்டிர பெண்மணி புஷ்கலாதேவிக்கும் திருமணம் நடக்கும். ஆரியன் என்றால் 'தலைவன்'. 'காவு' என்றால் 'தோட்டம்'. ஐயப்பன் என்னும் தலைவன் குடியிருக்கும் தோட்டம் என்று இதற்கு பொருள். இங்கு சென்று ஐயப்பனை தரிசிப்பதுடன், இயற்கை காட்சியையும் ரசித்து வரலாம்.
இருப்பிடம்: செங்கோட்டையில் இருந்து 22 கி.மீ.,
நேரம் : அதிகாலை 5:00 - 12:00, மாலை 5:00 - இரவு 8:00 மணி
தொலைபேசி : 0475 - 221 1566
அச்சங்கோவில்
பிரம்மச்சாரியான ஐயப்பன், சாஸ்தா என்ற மூல அவதாரத்துடன் பூர்ணா, புஷ்கலா தேவியர்களுடன் காட்சி தருகிறார். இங்கு டிசம்பர் மாத மண்டல பூஜை காலத்தில் தேர்த்திருவிழா நடப்பது சிறப்பு. இங்கு தோட்டங்கள் அதிகம் என்பதால் விஷப்பூச்சிகள் கடித்து சிரமப்படும் தொழிலாளர்களுக்கு தீர்த்தம் கொடுக்க இங்கு அழைத்து வருவார்கள். சபரிமலை போல ௧௮ படிகள் இங்குள்ளன.
இருப்பிடம்: செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ.,
நேரம் : அதிகாலை 4:00 - 8:00, மாலை 5:00 - இரவு 8:00 மணி
சாஸ்தாம் கோட்டை தர்மசாஸ்தா
சாஸ்தாம் கோட்டை தர்மசாஸ்தா கோவிலில் பிரபா என்னும் மனைவி, சத்யகன் என்னும் மகனுடன் ஐயப்பன் கோவில் கொண்டுள்ளார். ராம லட்சுமணர் ராவணவதம் முடித்து அயோத்தி திரும்பும் போது தமக்கு போரில் வெற்றி கிடைத்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக இவரை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது. இங்குள்ள ஏரிக்கரையில் ராமர் பிதுர்தர்ப்பணமும் செய்தார்.
இருப்பிடம்: கொல்லத்தில் இருந்து 25 கி.மீ.,
நேரம் : அதிகாலை 4:00 - 8:00, மாலை 5:00 - இரவு 8:00 மணி
தொலைபேசி : 0471 - 231 0921
மஞ்சப்புரா ஐயப்பன்
இங்கே ஐயப்பனுக்கு சிலை இல்லை. ஒரு விபூதிப்பை, வெள்ளித்தடி, கல் ஆகியவற்றையே ஐயப்பனாகக் கருதி வழிபடுகின்றனர். சபரிமலைக்கு பெரியபாதையில் செல்ல முதல் உரிமை பெற்ற அம்பாடத்து மாளிகா குடும்பத்தைச் சேர்ந்த கேசவன்பிள்ளை என்பவர், வயது முதிர்வால் மலை ஏற சிரமப்பட்டார். ஒருமுறை அவர் மலையேற முடியாமல் பாதி வழியில் தவித்த போது, ஐயப்பன் ஒரு அந்தணர் வடிவில் வந்து வெள்ளித்தடி, கல், விபூதிப்பை ஆகியவற்றைக் கொடுத்து பார்த்துக் கொள்ளும்படி சொன்னார். ஆனால் போனவர் திரும்பவில்லை. அந்தப் பொருட்களுடன் கேசவன்பிள்ளை வீடு திரும்பி விட்டார். அங்கு வந்த அந்தணர் அந்தப் பொருட்களை ஐயப்பனாகக் கருதி வழிபடச் சொன்னார். அன்று முதல் அந்தப் பொருட்கள் ஒரு சிறிய கோவிலில் வைத்து பூஜிக்கப்படுகின்றன.
இருப்பிடம்: எர்ணாகுளத்தில் இருந்து காலடி வழியாக 43 கி.மீ., சபரிமலை திறக்கும் மாத பூஜை, உள்ளிட்ட நாட்களில் மட்டுமே இந்தக் கோவிலும் திறக்கப்படும்.
நேரம் : அதிகாலை 5:00 - 1:00, மாலை 5:00 - இரவு 8:00 மணி
கரமனை தர்ம சாஸ்தா
ஒரு காலத்தில் திருவனந்தபுரம் நகரம் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என அழைத்தனர். இவ்வூரை ஆண்ட மகாராஜா ஒருவர், சிலந்திகள் வலை கட்டிய ஒரு இடத்தில் சாஸ்தா சிலை ஒன்றைக் கண்டெடுத்தார். அதை ஊருக்குள் நல்ல இடம் தேர்வு செய்து பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தார். ஆனால் கனவில் சாஸ்தா தோன்றி, தன்னைக் கண்டெடுத்த ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியிலேயே பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி கரமனை என்ற அந்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது. இந்தக் கோவிலின் விமானம் கூம்பு வடிவில் அமைந்துள்ளது.
இருப்பிடம்: திருவனந்தபுரம் கிழக்கே கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 - 8:00 , மாலை 5:00 - இரவு 11:00 மணி
தொலைபேசி: 0471 - 245 1837.

