/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
திங்கள் இரவில் மட்டும் திறக்கும் சிவன் கோவில்
/
திங்கள் இரவில் மட்டும் திறக்கும் சிவன் கோவில்
ADDED : டிச 09, 2016 09:13 AM

தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் திங்கட்கிழமை மட்டுமே பூஜை நடக்கும் இக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தில் தரிசிப்பது சிறப்பு.
தல வரலாறு: வான்கோபர், மகாகோபர் என்ற முனிவர்களுக்கு இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா என்ற சந்தேகம் எழுந்தது. தங்களுக்கு பதில் சொல்லும்படி இருவரும் சிதம்பரம் நடராஜரிடம் வேண்டினர். அவர்களை பரக்கலக்கோட்டைக்கு சென்று காத்திருக்கும்படியும், அங்கு வந்து அவர்களது சந்தேகத்திற்கு பதிலளிப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி இத்தலம் வந்த இரு முனிவர்களும் ஒரு புளியமரத்தின் கீழ் அமர்ந்தனர். ஒரு கார்த்திகை சோமவாரத்தில் (திங்கள்கிழமை) அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு நடராஜர் அவர்களுக்கு காட்சியளித்தார். ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று இருவருக்கும் பொதுவாக, 'இல்லறமோ, துறவறமோ அது நல்லறமாக இருந்தால் சிறப்பு' என்று பதிலளித்து அந்த மரத்திற்குள் ஐக்கியமானார். நடுநிலையான பதில் சொன்ன சிவன் என்ற காரணத்தால் இவருக்கு 'பொது ஆவுடையார்' என்றும், 'மத்தியபுரீஸ்வரர்' என்றும் பெயர் சூட்டப்பட்டது.
ஆலமரத்தில் சிவன்: சிவபெருமான் வெள்ளால மரத்தின் வடிவில் அருள்பாலிக்கிறார். மரத்தின் முன்புறத்தில் சந்தன காப்பிட்டு, வஸ்திரம் அணிவித்து சிவலிங்கம் போல் அலங்கரிக்கின்றனர். அப்போது மரத்தைச் சுற்றிலும் வெள்ளை நிற துணியால் மறைத்து விடுவர். முனிவர்களுக்கு காட்சி தந்ததன் அடையாளமாக மரத்திற்கு முன்புறம் சிவனின் பாதம் இடம் பெற்றுள்ளது. சுவாமிக்கு தனியாக விமானம் ஏதுமில்லை. மரத்தின் இலைகளும், கிளைகளுமே விமானமாக கருதி வணங்கப்படுகிறது. சிவனுக்கு முன்புறத்தில் கஜலட்சுமி காட்சி தருகிறாள். வீரசக்தி விநாயகருக்கும், காவல் தெய்வமான பெத்த பெருமாளுக்கும் சன்னிதிகள் உள்ளன. வான்கோபர், மகாகோபர் முனிவர்கள் புளிய மரத்தின் கீழ் வீற்றிருக்கின்றனர். கோவிலுக்கு அருகில் தீர்த்தம் உள்ளது.
நள்ளிரவு தரிசனம்: திங்கட்கிழமையன்று மட்டும் இரவு 10:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11:00 மணிக்கு சுவாமிக்கு பூஜை நடத்தப்படும். அப்போது சுவாமியை தரிசிக்க முடியாமல் திரையிடப்படுகிறது. பின் 11:30 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டு நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், மகாகோபர், வான்கோபர் சன்னிதிகளில் பூஜை நடத்துவர். நள்ளிரவு 12:00 மணிக்கு மீண்டும் சன்னிதி திறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன்பாக சாத்தப்படும். திங்கட்கிழமையன்று தரிசனத்திற்காக சன்னிதி நடை திறக்கும் போது தரிசிக்க வரும் பக்தர்களில் வயது முதிர்ந்தவருக்கு முதல் மரியாதையாக பிரசாதம் அளிக்கப்படும். அவரிடம் காணிக்கையாக ஒரு ரூபாய் பெறப்படும். இந்த காணிக்கை “காளாஞ்சி' எனப்படுகிறது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள மரத்தில் தாலி, தொட்டில் கட்டி வழிபாடு செய்கின்றனர். தைப்பொங்கலன்று மட்டுமே பகலில் கோவில் திறக்கப்படும்.
முடி வளர விளக்குமாறு: சிவனருளால் விருப்பம் நிறைவேறப் பெற்றவர்கள் கார்த்திகை சோமவாரத்தில் காணிக்கை செலுத்துகின்றனர்.
தங்களின் நிலத்தில் விளைந்த நெல், உளுந்து, பயிறு, எள் முதலிய தானியங்கள், வஸ்திரங்கள், தங்கக்காசுகளை குவியலாக செலுத்துகின்றனர். முடி வளர்வதற்காக பெண்கள் 'விளக்குமாறு' காணிக்கை செலுத்துவது குறிப்பிடத்தக்கது. இதற்காக தென்னங்கீற்றில் இருந்து தங்களின் கைகளாலேயே விளக்குமாறு செய்கின்றனர்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் பட்டுக்கோட்டை. இங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் பரக்கலக்கோட்டை.
தொலைபேசி: 04373 283 295, 248 781.

