
சிலருக்கு படிப்புக்கேற்ற, மனதிற்கேற்ற வேலை கிடைக்காது. இத்தகையவர்கள் கடலுார் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரரை வழிபடுங்கள்.
சிவபக்தரான விவசாயி ஒருவர் தினமும் ஒருவருக்கு உணவளித்த பின்னரே தான் சாப்பிடுவார். அவரது பெருமையை வெளிப்படுத்த விரும்பிய சிவன்
திருவிளையாடலை நிகழ்த்தினார். ஒருநாள் யாரும் சாப்பிட வரவில்லை. அதனால் விவசாயி ஆளைத் தேடிச் சென்ற போது, முதியவர் ஒருவரைக் கண்டு சாப்பிட அழைத்தார்.
அவரோ, ''வேலை கொடுங்கள். கூலிக்குப் பதில் சாப்பிடுகிறேன்'' என்றார். அதன்படி வயலில் விதைக்கும் பணியை முதியவருக்கு கொடுத்தார். வீட்டிற்கு சென்று உணவு எடுத்து வரச் சென்றார் விவசாயி.
அதற்குள் பெரியவர் விதைத்த தினை, அறுவடைக்கு தயாராக இருந்தது. ''இன்று விதைத்த பயிர் இன்றே விளைந்தது எப்படி?'' எனக் கேட்டார். சிவபெருமானாக காட்சியளித்து மறைந்தார் முதியவர். அந்த இடத்திலேயே சுயம்பு லிங்கமாக சிவன் எழுந்தருளினார். பின்னர் இங்கு கோயில் கட்டப்பட்டது.
சிவன் பணியாளராக வந்ததால், படிப்புக்கேற்ற வேலையில்லையே என வருந்துபவர்கள், இங்கு பூஜை செய்தால் வேலை கிடைக்கும். நிலத்தை உழுத முதியவர் பயன்படுத்திய கலப்பை, கலம் இங்கு உள்ளது. அம்மனின் திருநாமம் ஒப்பிலாநாயகி. நடராஜருக்கு அருகில் திருமால் சங்கு ஊதிய படியும், பிரம்மா மத்தளம் இசைத்தபடியும் உள்ளனர்.
இசையில் நாட்டமுள்ளோர் அர்ச்சனை செய்கின்றனர். 35 துவாரம் கொண்ட கலைநயம் மிக்க கல்ஜன்னல் ஒன்று பிரதோஷ நந்திக்கு முன்பு உள்ளது.
எப்படி செல்வது: கடலுார் - ஆலம்பாக்கம் வழியில் 18 கி.மீ.,
விசேஷ நாள்: ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94434 34024
அருகிலுள்ள கோயில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் 26 கி.மீ., (மனநிம்மதிக்கு...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 04142 - 236 728