பிளாஷ்பேக் : சினிமா பாடலை நம்பி ஏமாந்த கவிஞர்
கருப்பு வெள்ளை காலத்து திரைப்பட பாடல் ஆசிரியர்களில் கண்ணதான், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தஞ்சை ராமய்யாதாஸ் ஆகியோர்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் இவர்களை தாண்டியும் பல அற்புதமான பாடலாசிரியர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் திருச்சி தியாகராஜன்.
தேசபக்தி பாடல்கள், கம்யூனிச சித்தாந்த பாடல்களை எழுதியவர் இவர். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இவரது பாடல்கள் இசை தட்டுகளாக வெளிவந்தது. சுயாதீன பாடலாசிரியராக புகழ்பெற்றிருந்தார். 'பூத்த தடாகமடி நீ' என்ற இவரது பாடல் திரைப்பாடல்களை விட பெரிய வெற்றி பெற்றது.
அவரை சுற்றி இருந்தவர்கள் சிலர் சினிமாவில் பாடல் எழுதினால் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசையூட்டினார்கள். இதை நம்பி தனது ரயில்வே பணியை விட்டுவிட்டு குடும்பத்தோடு சென்னையில் செட்டிலானார். ஆனால் அவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் குடும்பம் வறுமையில் சிக்கியது. அப்போது தனது நண்பரான பாடகர் சி.எஸ்.ஜெயராமனை அணுகினார். அவரது சிபாரிசின் பேரில் 'பொன்னு விளையும் பூமி' என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு செங்கமலத் தீவு, துளசி மாடம், குபேரத்தீவு, உல்லாசம் லாரி டிரைவர் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.
எம்ஜிஆர் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்படட 'ரிக்ஷா ரங்கன்' படத்திற்கு அனைத்து பாடல்களையும், எழுதினார். படம் கைவிடப்பட்டதால் சம்பளம் வரவில்லை. இதனால் மனம் உடைந்தார், அதோடு மெட்டுக்கு பாட்டு எழுதுவதும் அவருக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகி மீண்டும் இலக்கிய பணிக்கு திரும்பினார். இன்றைக்கு அவர் எழுதிய திரைப்பாடல்களை விட தனி பாடல்கள்தான் பேசப்படுகிறது. இவரது தனி பாடல்களை சாகித்ய அகாடமி 17 மொழிகளில் வெளியிட்டிருக்கிறது.