தயாராகி 40 ஆண்டுகள் ஆன நிலையில் கேன்ஸ் விழாவில் பாராட்டுகளை குவித்த மலையாள படம்
கடந்த சில நாட்களாக 79வது கேன்ஸ் திரைப்பட திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மலையாள திரைப்படமான 'அம்மா அறியான்' என்கிற திரைப்படம் திரையிடப்பட்ட போது அங்கிருந்த பார்வையாளர்கள் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ள நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்த படம் 1986ல் அதாவது 40 வருடங்களுக்கு முன்பு வெளியான படம். இதனை இயக்கிய இயக்குனர் ஜான் ஆபிரகாம் இந்த படம் வெளியான அடுத்த வருடமே காலமானார் என்பது சோகம்.
அந்த காலத்தில் ஒடிஸா கலெக்டிவ் என்கிற அமைப்பின் மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி இந்த படத்தை அவர் உருவாக்கியிருந்தார். அதே சமயம் இந்த படம் அப்போது திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் கூட சினிமா கற்கும் மாணவர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அசல் நெகட்டிவ் தொலைந்துவிட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்ட நிலையில் தேசிய திரைப்பட காப்பகத்தில் எஞ்சியிருந்த பிரின்டுகளைக் கொண்டு இதனை 4கே தரத்தில் புதுப்பித்துள்ளனர்.